விநாயகர் சதுர்த்திக்குதான் சொல்லல.. ஆயுத பூஜைக்கு சொல்லிட்டாரு.. தவெக தலைவர் விஜய் வாழ்த்து
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் ஓணம் பண்டிகைக்கு விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்ததை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், ஆயுத பூஜைக்கு தனது வாழ்த்தினை தெரிவித்து இருக்கிறார் விஜய்.
தமிழ் திரையுலகின் டாப் நடிகராக இருக்கும் விஜய், அரசியல் களத்திலும் கால் பதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து இருக்கும் விஜய், வரும் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை நடத்த உள்ளார். விஜய் கட்சியின் மாநாட்டில் தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடிக்கான விளக்கம் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

இதனால், விக்கிரவாண்டியின் வி சாலையில் விஜய் நடத்த இருக்கும் இந்த மாநாடு அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழக அரசியல் களத்திலும் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து முக்கிய தலைவர்களின் பிறந்த நாள், பண்டிகைகள் போன்றவற்றிற்கு எக்ஸ் தளம் வாயிலாக வாழ்த்து கூறி வருகிறார். ஆனால், விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து கூறவில்லை. இது கடும் விமசனங்களுக்கு உள்ளானது.
சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கூட சிலர் அவரை விமர்சித்து பதிவிட்டனர். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாமல் திமுக பின்பற்றும் அதே பாணி திராவிட அரசியலில் விஜய் பயணிக்கிறாரா? என்றும் அனைவரும் சமம் என்றால் அனைத்து பண்டிகைக்கும் வாழ்த்து கூற வேண்டியதுதானே எனவும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இந்துத்வா அமைப்புகளும் நடிகர் விஜய், ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொல்லாததை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து வந்தன. திமுகவின் ஊதுகுழல். திமுகவின் - B teem. கமல் போல திமுக அதிருப்தி ஓட்டுக்களே ஜோசப் விஜய்க்கு பிரதானம். ஜோசப் விஜயின் ரசிகர்களின் உழைப்பு இறுதியில் சுரண்டப்பட்டு திமுக விடம் தஞ்சம் அடையும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படும் நிலையில், ஆயுத பூஜைக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில், நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications