சீமான் உள்ளிட்ட யாரையும் தரம்தாழ்ந்து விமர்சிக்க கூடாது.. தவெக ஆலோசனை கூட்டத்தில் விஜய் கண்டிஷன்?
சென்னை: தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் சமூக வலைத்தளில் கீழ்த்தரமான சொற்களை பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் உள்பட யாரையும், தரக்குறைவாக விமர்சிக்க கூடாது என்று கட்சியினருக்கு கட்டுப்பாடு விதித்தார். மேலும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்வது உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது. இதேபொன்று இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்க கூடிய நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சியின் கொடி அறிமுக விழா கடந்த ஆகஸ்டு 22 ஆம் தேதி நடைபெற்றது. அதன்பிறகு தனது கட்சியின் கொள்கை மற்றும் தனது அரசியல் பாதை ஆகியவற்றை விளக்கும் வகையிலும் தனக்கு உள்ள செல்வாக்கை காட்டும் வகையிலும் மாநில மாநாட்டை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடத்தினார்.

இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சகக்ணக்கான விஜய்யின் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். விக்கிவாண்டியே குலுங்கியது என்று சொல்லும் அளவுக்கு தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. மாநாட்டில், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தில் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். தன்னுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாகியுள்ளது.
தமிழ் தேசியமும் , திராவிடமும் இரு கண்கள் போன்றது என விஜய் பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீமான், அவரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். கொள்கைக்கு எதிராக வந்தாலும் தனக்கு எதிரி தான் என்று முழங்கிய சீமான், அன்பு என்றால் அன்பு. வம்பு என்றால் வம்பு. எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது.
உங்களிடம் இருப்பது கொள்கை இல்லை. கூமுட்டை. அழுகின கூமுட்டை. ஒன்னு ரோட்ல இந்த பக்கம் நில்லு. இல்லை அந்த பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரில அடிபட்டு செத்துப்போவ. எப்படி தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றாக முடியும் என சாடினார். சீமானின் பேச்சுக்கு பதில் தெரிவித்த தவெகவினர், சீமான் இதயத்தில் இருந்து பேசவில்லை என்று கூறினர். கட்சி மாநாடு முடித்து ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இத்தகைய அரசியல் பரபரபுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமையகத்தில் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தவெக மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் காலை 11 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு விஜய் வருகை தந்தார்.
விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், அது தொடர்பாகவும் கட்சி நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி, விஜய்யின் பேச்சுக்கு அரசியல் களத்தில் வரும் விமர்சனங்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது தொடர்பாகவும் விஜய் பேசினார். குறிப்பாக சமூக வலைத்தளில் கீழ்த்தரமான சொற்களை பயன்படுத்தி விமர்சிக்க கூடாது என்று கூறினார்.
சீமான் உள்ளிட்ட யாரையும் தரக்குறைவாக விமர்சிக்க கூடாது என்று கட்சியினருக்கு விஜய் வலியுறுத்தினார். நமது செயல் எப்போது அடுத்தவர்களை விமர்சிப்பதில் இருக்க கூடாது என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்வது உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது. மாநாட்டிற்கு பிறகு முதல் முறையாக கட்சி நிர்வாகிகளை விஜய் இன்று சந்தித்து இருப்பது தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதேபொன்று 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்வதற்கு தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. குற்ப்பாக பேஸ்புக்கிற்கு தனி டீம், எக்ஸ் தள பக்கத்திற்கு தனி டீம், யூடியூப் சமூக வலைத்தளத்துக்கு தனி டீம், இன்ஸ்டாகிராமுக்கு தனி டீம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications