இதுவும் காப்பியா? பவன் கல்யாண் மாடல்.. தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: தவெக தலைவர் விஜய், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஸ்டைலை பின்பற்றி வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இன்று விஜய் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற புகைப்படம் வைரலாகும் நிலையில், இந்த விஷயத்திலும் பவன் கல்யாண் கிரியேட் செய்ததைத்தான் விஜய் காப்பி அடித்துள்ளார் எனக் கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் கட்சி நிகழ்ச்சி மற்றும் பரப்புரைக்காக அவ்வப்போது பொதுவெளிக்கு வந்து செல்கிறார். அப்படி அவர் வரும்போது அவரது ரசிகர்களையும் தொண்டர்களையும் ஈர்க்கும் விதமாகச் சில செயல்களைச் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக ரேம்ப் வாக் செல்வது, சைக்கிளில் செல்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்கிறார்.

சினிமா மட்டுமல்லாது தனது அரசியல் பயணித்திலும், ஆந்திர அரசியல்வாதிகளைப் பின்பற்றி வருகிறார் விஜய். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் லேசான காக்கி நிற பேண்ட், வெள்ளைச் சட்டை அணிந்து வருகிறார் விஜய். விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாடு தொடங்கி தற்போது வரை இந்த நிற உடையையே அணிந்து வருகிறார் விஜய்.
வெள்ளைச் சட்டையும், பழுப்பு நிற பேண்ட்டும் விஜய்யின் அரசியல் டிரஸ் கோடாகவே மாறிவிட்டது. அண்மையில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவின் போது, தவெக தொண்டர்கள் ஏராளமானோர் இந்த நிற உடை அணிந்து வந்து வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த நடிகரும், ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் ஸ்டைலை விஜய் ஃபாலோ செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. திடீரென கண் கலங்குவது, ஆவேசமாகப் பேசுவது, ரசிகர்களை நோக்கி சைகைகள் காட்டுவது, சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றை விஜய் செய்வதெல்லாம் பவன் கல்யாணை பார்த்துத்தான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது தவெக. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் வந்திருந்த விஜய், சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். விஜய் பட்டு வேட்டி சட்டையுடன் திருச்செந்தூர் சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. விஜய்யின் இந்த மொமெண்ட்டும், பவன் கல்யாண் கிரியேட் செய்ததுதான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
விஜய் செய்வதைப் போன்ற சாயலில் வேறு கட்சித் தலைவர்கள் யாராவது எதாவது செய்தால் தங்களின் தலைவரை அப்படியே ஃபாலோ செய்கிறார் எனத் தவெகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். விஜய் செய்வதற்கு முன்பே சில தலைவர்கள் அவ்வாறு செய்திருந்தாலும் அதைக் கணக்கில் கொள்ளாத தவெகவினர் விஜய்தான் அதைக் கண்டுபிடித்தார், மற்றவர்கள் எல்லாம் காப்பி அடிக்கிறார்கள் என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வழக்கம்.
விஜய் அரசியலுக்கு வந்தது முதல் செய்யும் அனைத்தும் ஏற்கனவே மற்ற தலைவர்கள் செய்தவைதான் என்பதை விஜய்யின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்ற விமர்சனமும் உள்ளது. தற்போது விஜய்யின் பெரும்பாலான செயல்கள் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை எனச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications