பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.. கொஞ்சம் தவறினாலும் நடவடிக்கை.. நிர்வாகிகளுக்கு விஜய் எச்சரிக்கை!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, தங்களின் மாவட்டங்களில் கிளை, ஒன்றிய மற்றும் நகரச் செயலாளர்களை நியமிக்கும் போது, மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் திறமையானவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. பிப்.2ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், தவெக தரப்பில் நிர்வாகிகள் நியமனம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே கடந்த வாரம் முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் 2அம் கட்டமாக மீண்டும் 19 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நடிகர் விஜய் முகம் பொருத்திய வெள்ளி நாணயம் வழங்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கட்சியின் நிர்வாக வசதிகளுக்காக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகின்றனர். அதாவது தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளை நிர்வகிக்கும் வகையில், சுமார் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டு நியமித்து வருகிறது.
அதேபோல் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்டங்களின் நகர, கிளை மற்றும் ஒன்றிய செயலாளர்களை நியமனம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் ஒரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளார்.
அதாவது, மாவட்டங்களின் நகர, கிளை மற்றும் ஒன்றிய செயலாளர்களை நியமிக்கும் போது, விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தவர்களுக்கும், தொடர்ந்து கட்சியுடன் பயணிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஒருவேளை கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் தங்களின் ஆதரவாளர்களுக்கு பதவி கொடுத்தால், நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கட்டமைப்பு இருக்கும் நிலையில், கடந்த ஓராண்டாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து கட்சி அலுவலகங்களை திறந்து வைத்துள்ளார். இதனால் ஓராண்டு நிறைவு விழாவுக்கு பின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தவெக கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications