1952க்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் அமைகிறது கூட்டணி ஆட்சி
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் 1952 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையில் முதல் முறையாகக் கூட்டணி ஆட்சி அமைகிறது. தவெக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவை கொண்டு நாளை புதிய அரசு அமைகிறது.

தமிழகத்தில் இதற்கு முன்னதாகக் கூட்டணி ஆட்சி உருவானது 1952-ஆம் ஆண்டில்தான். அதன் வரலாற்றுப் பின்னணியை பார்க்கலாம்.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் தனிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. ஆட்சியைத் தக்கவைக்க பல்வேறு கட்சிகளின் ஆதரவைத் திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ராஜாஜி மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டார். பல்வேறு கட்சிகளின் ஆதரவைத் திரட்டி ராஜாஜி ஆட்சியை அமைத்தார்.
இந்த அமைச்சரவையில் 'காமன்வீல்' (Commonweal Party) கட்சியைச் சேர்ந்த எம். மாணிக்கவேலு நாயக்கர் அமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதன் பிறகு, 1954-ல் காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, மாணிக்கவேலு நாயக்கர் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே 1952 க்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அமையவில்லை. 2006- 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு 96 இடங்கள் மட்டுமே கிடைத்ததால் மைனாரிட்டி ஏற்பட்டது. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைத்தது. ஆனால் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு கொடுக்கவில்லை.
அதன் பிறகு அமைச்சரவையில் கூட்டணி கட்சிக்கு பங்கு கொடுப்பது என்பது நடைபெறவே இல்லை, காரணம் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தன. ஆனால் 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் எக்கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத 'தொங்கு சட்டமன்றத்தை' (Hung Assembly) உருவாக்கியுள்ளன. இதனால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைகிறது. அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுகிறது. கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டாலும் அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவு என்பதால் அமைச்சரவையில் இடம் பெறமாட்டார்கள்.
தவெகவின் பலம்: 108 இடங்கள் (தனிப்பெரும் கட்சி). ஒன்று நீங்கலாக 107
ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 118.
கூட்டணி கட்சிகளின் ஆதரவு: காங்கிரஸ் (5), விசிக (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2), மற்றும் ஐ.யூ.எம்.எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய்யின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.
பதவியேற்பு: மே 10, 2026 அன்று காலை 10 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
எம்.ஜி.ஆர் சாதனையை விஞ்சிய விஜய்: ஒரு ஒப்பீடு
1977-ல் எம்.ஜி.ஆர் தனது புதிய கட்சியான அதிமுக மூலம் நிகழ்த்திய சாதனையை, 2026-ல் விஜய் தனது தவெக மூலம் மிஞ்சியுள்ளார்.
1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் 33.5 சதவீதம் வாக்குகளை பெற்றார். ஆனால் விஜய் 34.92 வாக்குகளை பெற்றார். விஜய்க்கு 1.7 கோடி வாக்குகள் கிடைத்துள்ளது. அது போல் 1977 இல் 130 இடங்களில் எம்ஜிஆர் வென்றார். ஆனால் விஜய் 108 இடங்களில் வென்றுள்ளார். எம்ஜிஆர் காங்கிரஸ் ஆதிக்கத்தை முடிவுக் கொண்டு வந்தார். விஜய் 60 ஆண்டுகள் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
விஜய்யின் இந்த அதிரடி வெற்றிக்குக் காரணமாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடும் முக்கியக் காரணிகள் என்ன என்பதை பார்க்கலாம்.
இளைஞர்கள், பெண்கள்: 18 முதல் 34 வயதுடைய இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவு.
நகர்ப்புற எழுச்சி: சென்னை போன்ற மாநகரங்களில் தவெக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. குறிப்பாக, சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14-ஐ தவெக கைப்பற்றியுள்ளது.
வாக்கு வித்தியாசம்: இரண்டாம் இடத்தைப் பிடித்த திமுகவை விட சுமார் 60 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று விஜய் சாதனை படைத்துள்ளார்.
எம்.ஜி.ஆரைப் போலவே திரையுலகில் இருந்து வந்து, முதல் தேர்தலிலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள விஜய், தமிழகத்தின் முதல் கூட்டணி ஆட்சியை வழிநடத்தத் தயாராகிவிட்டார்.












Click it and Unblock the Notifications