கரூர் சம்பவம்.. A1 மதியழகனிடம் துருவித் துருவி விசாரித்த SIT.. மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு
கரூர்: தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக மாவட்ட செயலாளர் மதியழகனிடம் சிறப்பு புலனாய்வு குழு 2 நாட்கள் விசாரணை நடத்திய நிலையில் கரூர் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். மதியழகனுக்கு வரும் 14 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் உள்ள நிலையில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கடுமையான நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீசார் கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டது. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மதியழகன் A1 ஆக குறிப்பிடப்பட்டார். மதியழகன் உள்ளிட்டோர் மீது பிரிவு 105 (கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை), பிரிவு 110 (குற்றமற்ற கொலை செய்ய முயற்சி), பிரிவு 125 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசரம் அல்லது அலட்சிய செயல்களுக்கு தண்டனை), பிரிவு 223 (பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை), பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரூர் துயரச் சம்பவ வழக்கை விசாரிக்கும் ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, கரூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. இந்த வழக்கை நீதிபதி பரத்குமார் விசாரித்தார்.
அப்போது, தவெக தரப்பில், "ஏற்கெனவே போலீசார் விசாரணை நடத்திவிட்டனர். அதனால் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த எஸ்ஐடி விசாரணையே தேவையில்லை என்று தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மதியழகனிடம் உள்ளூர் போலீசார் தான் விசாரித்தனர். அதனால் நாங்கள் விசாரிக்க வேண்டும். ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும்." என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, "2 நாட்கள் மட்டும் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது." என்றார்.
மேலும், விசாரணையை முடித்து சனிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் மதியழகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து மதியழகனை, சிறப்பு புலனாய்வுக் குழுவினர், விசாரணைக்காக கரூர் சுற்றுலா மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து 2 நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பின் தவெக மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் திருச்சி சிறைக்கு அழைத்துச் சென்றனர். மதியழகனிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்திய நிலையில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து மதியழகனுக்கு வரும் 14 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் உள்ள நிலையில் திருச்சி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications