அண்ணோவ் வெளிய வாண்ணா? விஜயால் வெறியான விர்ச்சுவல் வாரியர்ஸ்! அறிக்கை மட்டும் போதுமா? தவிக்கும் தவெக
சென்னை: விஜய் கட்சி ஆரம்பித்து அதற்குப் பிறகு மாநாட்டையும் நடத்தி முடித்துள்ளார். ஆனால் மாநாடு நடத்தி 250 நாட்கள் கடந்தும் ஒரே ஒரு நாள் மட்டுமே கள அரசியல் செய்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விஜய் கட்சி நிர்வாகிகள் வெளியே வாங்க விஜய் அண்ணா என வெளிப்படையாக சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்து வருகின்றனர் வெறும் அறிக்கை அரசியல் மட்டுமே தமிழகத்திற்கு உதவாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
இயக்குனரின் மகனாக சினிமாவில் அறிமுகமானாலும் தனக்கென தனி பாதையை வகுத்து தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகனாக இருப்பவர் விஜய். அப்பா மூலம் பல வாரிசுகள் சினிமாவுக்கு வந்திருந்தாலும் அவர்களில் பலர் காணாமல் போய்விட்டனர்.
ஆனால் 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் வெற்றி கொடி நாட்டி வருகிறார் விஜய். சினிமாவைப் போலவே அரசியலிலும் சாதிக்க வேண்டும் என தமிழக அரசியல் களத்தில் களமிறங்கி இருக்கிறார் தளபதி விஜய்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் நியமனம், பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் என பிசியாக இருக்கிறார். இடையில் புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் இப்தார் நோன்பு திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அதற்குப் பிறகு விஜய் செய்த கள அரசியல் என்றால் அது பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்ட குழுவினரை சந்தித்தது மட்டும் தான். மற்றபடி தமிழக பிரச்சனைகள் குறித்து அறிக்கை மட்டுமே வெளியிட்டு வந்தார். சமீபகாலமாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதாவ் அர்ஜுனா, சி.டி.ஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பெயரிலும் அறிக்கை வருகிறது.
இந்த நிலையில் சிவகங்கை காவலர் மரணம் அடைந்த அஜித்குமார் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக,பாமக, பாஜக, என அனைத்து கட்சிகளும் குறிப்பாக அந்த கட்சியின் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டார். ஆனால் விஜய் தரப்பில் ஆனந்த் மட்டுமே அறிக்கை வெளியிட்டார். எதனால் விஜய் நேரடியாக அறிக்கை வெளியிடவில்லை என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்தது.
இரண்டு நாட்களாக அது தொடர்பான பேச்சு இருந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் விஜய். இது ஒருபுறம் இருக்க விஜய் இன்னும் கள அரசியலுக்கு வராதது ஏன்? என கேள்வி எழுப்புகின்றனர். திமுகவினர் அல்ல தமிழக வெற்றிக் கழகத்தினர். மேலும், சமூக வலைதளங்களில் வெளியே வாங்க விஜய்! என பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, போதை பொருள் விற்பனை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என மக்கள் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் சாதிய வன்கொடுமை சம்பவங்கள், கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதற்கெல்லாம் விஜய் வெறும் அறிக்கை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார். எனவே அதிமுக போன்ற கட்சிகளை போல விஜயும் ஆர்ப்பாட்டம் போராட்டம் என அறிவிக்க வேண்டும். அதில் விஜய்யும் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் விஜய் கட்சியினர் உற்சாகமாக பணியாற்ற முடியும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications