ஸ்டாலினையே தோற்கடிச்சு..டம்மியாக இருக்கும் விஎஸ் பாபு! போர்க்கொடி தூக்கிய சமஉக்கள்? விஜய்க்கு தலைவலி
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அமைச்சரவை வாய்ப்பு கிடைக்காத சில எம்.எல்.ஏ-க்கள் தற்போது கட்சி பொறுப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அதில் சிலர் மாவட்ட செயலாளர் பதவி கோரி அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகம், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. தேர்தலுக்கு முன்பு புதிய கட்சியாக இருந்த போதிலும், மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவால் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைத்தது.

ஆட்சி அமைந்தபோது கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கும் அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. கூட்டணியில் ஒற்றுமையை பேணும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம்
தவெக சார்பில் வெற்றி பெற்ற பல எம்.எல்.ஏ-க்கள் அமைச்சரவை பொறுப்பை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அமைச்சரவையின் அளவு குறைவாக இருந்ததால் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது அமைச்சர்களாக பதவியேற்றவர்களைத் தவிர, பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் எந்த நிர்வாக பொறுப்பும் இல்லாமல் உள்ளனர். இதனால் அவர்களில் சிலர் கட்சிக்குள் முக்கிய பொறுப்புகளை எதிர்பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
வி.எஸ்.பாபு
அதிலும் குறிப்பாக, தேர்தலில் முக்கிய தலைவர்களை வீழ்த்தி வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை கட்சி தலைமையிடம் முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்ற வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்காதது தேர்தலுக்குப் பிறகு பரவலாக பேசப்பட்டது.
அரசியல் ரீதியாக மிக முக்கியமான வெற்றியைப் பெற்றிருந்த போதிலும் அவருக்கு அமைச்சரவை இடம் கிடைக்காதது குறித்து அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் தெரிவித்திருந்தனர்.
கட்சி பொறுப்புகள்
வி.எஸ். பாபுவும் சில நிகழ்ச்சிகளில் தனது ஆதங்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய கட்சி பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சிக்குள் சுமார் 10 எம்.எல்.ஏ-க்கள் மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்து வருவதாகவும், அதற்கான கோரிக்கையை கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மறுசீரமைக்கும் பணி
தேர்தலில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், தங்களது மாவட்டங்களில் கட்சியை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்ததாகவும், அதனால் மாவட்ட நிர்வாக பொறுப்புகளில் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், கட்சி தலைமை இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. மாவட்ட அமைப்புகளை மறுசீரமைக்கும் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், அவசர முடிவுகள் எடுக்கப்படாது என்று கூறப்படுகிறது.
விஜய்க்கு தலைவலி
ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே கட்சிக்குள் பதவி எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பது விஜய் தலைமைக்கு ஒரு புதிய சவாலாக பார்க்கப்படுகிறது. புதிய கட்சியாக இருந்தாலும் தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ளதால், நிர்வாக பொறுப்புகள், மாவட்ட அமைப்புகள், வாரியங்கள் மற்றும் கழகப் பதவிகள் குறித்து பலரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், இது பெரிய அளவிலான கிளர்ச்சியாக இன்னும் மாறவில்லை என்றும், பதவி எதிர்பார்ப்பால் உருவாகும் இயல்பான அழுத்தமாகவே கட்சி தலைமையினர் பார்க்கின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications