மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக முற்றுகை போராட்டம்! மேகதாதுவில் அணை கட்ட வேல்முருகன் எதிர்ப்பு!
சென்னை: மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என அச்சம் தெரிவித்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக திரண்டு வரும் 15 ஆம் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் அவர்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

உயிர்நாடி பிரச்சனை
தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சனையானக் காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. காவிரியின் குறுக்கே 1000 கோடி ரூபாய்ச் செலவில் புதிதாக மேகதாது அணை ஒன்றைக் கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசு, அத்திட்டத்திற்கான செயல்பாடுகளை இந்தாண்டே தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. அந்த அணை கட்டப்பட்டுவிட்டால், தமிழ்நாட்டுக்கு இப்போது கிடைக்கும் சிறிதளவு தண்ணீர் கூடக் கிடைக்காது என்பதால், மேகதாது அணைத் திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகிறது.

டெல்டா பாலைவனம்
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீர் உரிய அளவில், உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. அதற்கான எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாத ஒன்றிய அரசு, கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு துணை போவது வேதனையளிக்கிறது. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பாலைவனமாகும். காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் பாதிப்புக்குள்ளாகும்.

மத்திய அரசு
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரைத் தரமறுக்கும் கர்நாடக அரசு இப்போது வந்துகொண்டிருக்கும் நீரையும் முடக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசின் மறைமுகத் துணையோடு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவிரி நதி மீதான எந்தவிதமானக் கட்டுமானம் செய்வதாக இருந்தாலும் நான்கு மாநிலங்களின் ஒப்புதலும் வேண்டும். ஆனால், தற்போது ஒன்றிய அரசு கொடுத்துள்ளதாகக் கூறப்படும் ஒப்புதல் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.

15-ம் தேதி ஆர்ப்பாட்டம்
எனவே, நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழ்நாட்டு மக்களின் இயற்கை உரிமை பறிக்க முயற்சிக்கும், கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக வரும் 15 ஆம் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழர்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்படும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும், விவசாய அமைப்புகளும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.












Click it and Unblock the Notifications