குரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்... தமிழக அரசுக்கு வேல்முருகன் கண்டனம்
Recommended Video
சென்னை: குரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டது மிகப்பெரும் சதிச்செயல் என்றும், தமிழக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;
வந்தேறிக் கும்பல் துணைக்கண்டத்திற்குள் புகுந்த ஈராயிரம் ஆண்டுகளிலிருந்தே தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரான சதிச் செயல்களை செய்து வருகின்றது. 5ஆம் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்று பிஞ்சிலேயே பிள்ளைகளை வடிகட்டி இடைநிற்றலை ஊக்குவித்து கல்வியை மறுக்கின்ற கயமைச் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள ஒன்றிய அரசுப் பணிகள் மற்றும் ஒன்றிய நிறுவனப் பணிகளில் இந்தி பேசுவோரை நுழைத்து தமிழர்களைப் புறந்தள்ளுதல், தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவரும் சேரும்படி விதிகளை வளைத்தல், என இருந்தவர்கள் இப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 தேர்விலேயே கைவைத்துவிட்டார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் பாடத்திட்டத்தை மாற்றுவதாகச் சொல்லி அதில் இருந்துவந்த மொழித்தாளை நீக்கிவிட்டார்கள். நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான பாடத்திட்டம் சார்ந்தது இந்த மொழித்தாள் ஆகும். ஏன் இதை மாற்றினார்கள் என்பது தெரியாததல்ல. வெளி மாநிலத்தவர், குறிப்பாக இந்தி பேசுவோரை தமிழ்நாடு அரசின் உயர் பதவிகளுக்குக் கொண்டுவருவது; அதன்மூலம் தமிழர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து அவர்களை நிர்கதியில் தள்ளுவது.
ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு அடிபணிந்துதான் அதிமுக அரசு தமிழர்க்கு எதிரான இந்தச் சதிச்செயலைச் செய்துள்ளது. அழுகிப் புரையோடிய மனுவாத சவத்தை அருவருப்பவன் தமிழன் என்பது தெரிந்தும் இந்த அடாத செயலைச் செய்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உடனடியாக இதனைத் திரும்பப்பெற வலியுறுத்துவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications