தவெக நெல்லை மாவட்ட செயலாளர் திடீர் மரணம்.. கட்சி வேலையில் தீவிரமாக இருந்தவர்.. வேதனையில் விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி என்கிற அந்தோணி சேவியர் மாரடைப்பால் உயிரிழந்தது தவெக தலைவர் விஜய்யை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தவெகவில் அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்ள் பிரிக்கப்பட்டுள்ளன.

95 கட்சி மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் அண்மையில், கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை விஜய் அறிவித்தார். இன்னும் 6 மாவட்டங்களில் மாவட்ட பொறுப்பாளர்களை நியமிப்பதில் இழுபறி நீடிக்கிறது.
விரைவில் அந்த மாவட்டங்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுப்பாளர்களை நியமனம் செய்வதில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்தகட்டமாக கட்சியின் பொதுக்குழு வருகிற 28ஆம் தேதி கூடுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி என்கிற அந்தோணி சேவியர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். கட்சி பணிகளுக்காக சென்னை வந்திருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் சஜி. தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மறைவால் அக்கட்சி தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சஜி என்கிற அந்தோணி சேவியர். இவர் நெல்லை பாளையங்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சஜி நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின், தலைவராகவும், கேரளா மாநில விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியாக தொடங்கப்பட்ட பின்னர் நெல்லை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து பின்னர் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து கட்சி ரீதியான பணிகளை தீவிரமாக மேற்கொண்டிருந்தார். சென்னைக்கு கட்சி வேலை, ஆலோசனைக்காக அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தார்.
தவெக தலைவர் விஜய், பனையூர் கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு காரில் ஏறிய பிறகு, சஜி, விஜய்யை சந்தித்து பேச முயன்றார். உடனே காரில் இருந்து இறங்கிய விஜய், சஜியிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு காரில் ஏறிக் கிளம்பினார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் வைரலாகி இருந்தன.

இந்நிலையில், சென்னையில் நேற்று கட்சி பணிகளை முடித்துவிட்டு அறையில் தங்கி இருந்தபோது சஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தவெக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி உயிரிழந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த அன்பிற்குரிய சகோதரர் சஜி (எ) B.அந்தோணி சேவியர் காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.
என் மீதும் கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கழகப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications