தவெக போராட்டத்துக்கு நாங்க எப்போ அனுமதி மறுத்தோம்? திருப்பி கேட்ட காவல் ஆணையர் அருண்!
சென்னை: தவெக போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி எல்லாம் மறுக்கப்படவில்லை என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் தனிப்படை போலீசாரால் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தவெக போராட்டம் நடத்த அனுமதி கோரிய நாளில் அந்த இடம் வேறு காரணத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால், ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினரிடம் தவெகவினர் அனுமதி கோரிய நிலையில், அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினரை அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனு அளித்தனர்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்ட நிலையில், நீதிபதி வேல்முருகன் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தவெக போராட்டத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண். அப்போது, அவரிடம், தவெக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அருண் ஐபிஎஸ், "நாங்கள் எப்போது அனுமதி மறுத்தோம்? தவெக போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படவில்லை. இதுவரை நாங்கள் அனுமதி தராமல் இருந்ததில்லை, எல்லா கட்சிக்கும் எந்த விதியை பின்பற்றுகிறோமோ அதே விதியைத் தான் தவெக கட்சிக்கும் கடைபிடிக்கிறோம்.
தவெகவினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள். நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று சொல்லவில்லை. அனுமதி கிடைக்காது என நினைத்து அவர்களாகவே நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றதற்கு நாங்கள் காரணம் இல்லை" என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, தூர்தர்ஷன் அலுவலகம் அமைந்துள்ள சிவானந்தா சாலை பகுதியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்து உள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்தில் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை நடக்கும் கண்டன போராட்டத்தில் விஜய் கலந்து கொள்வார் என்று தெரியவந்துள்ளது. விஜய் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியகியுள்ளது.












Click it and Unblock the Notifications