"Exit Poll-களை விடுங்க! 109-வது மணி நேரத்தில் விஜய் முதல்வராவார்!" தவெக ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து வெளியாகியுள்ள எக்சிட் போல் கணிப்புகளைத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அடுத்த 109 ஆவது மணி நேரத்தில் விஜய் முதல்வராக பதவியேற்பார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும் ஆஸ்தான ஜோதிடருமான ராதன் பண்டிட் கணித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவியது.

வரும் மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (எக்ஸிட் போல்) தற்போது வெளியாகியுள்ளன. இதில் மேட்ரீஸ், பீப்பிள்ஸ் பல்ஸ், சிஎன்என், அக்னி, மின்னம்பலம் உள்ளிட்டவை தவெக ஒற்றை அல்லது இரட்டை இலக்கத்தில் 20 தொகுதிகளுக்குள் வெல்ல வாய்ப்பு என கணித்துள்ளன.
அது போல் ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பில் தவெகவுக்கு 98 முதல் 120 இடங்கள் வரை கிடைக்கும் என கணித்துள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கணிப்புகள் குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராதன் பண்டிட் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
எக்சிட் போல் கணிப்புகள் வெறும் கண்துடைப்பு!
செய்தியாளர்களிடம் பேசிய ராதன் பண்டிட், "வெளியாகியுள்ள எக்சிட் போல் முடிவுகளை நாங்கள் கண்டுகொள்ளவில்லை, அதை அப்படியே புறக்கணிக்கிறோம். இந்தத் தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியைப் (Sweep) பெறும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.
நாங்கள் 140 முதல் 170 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என உறுதியாக நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
தவெக-வின் ரகசிய சர்வே முடிவுகள்
கட்சியின் களப்பணி மற்றும் ரகசிய ஆய்வு குறித்து அவர் மேலும் கூறுகையில்:
"நாங்கள் கள நிலவரத்தைத் துல்லியமாக ஆய்வு செய்துள்ளோம். எங்களுக்கெனத் தனியாகத் தனிப்பட்ட முறையில் சர்வே நடத்தினோம்."
"எக்சிட் போலில் சொல்லப்படுவது போல எங்களுக்கு 20-25 சதவீத வாக்குகள் கிடைக்காது. மாறாக, குறைந்தபட்சம் 45 சதவீத வாக்கு வங்கியை நாங்கள் உறுதி செய்துள்ளோம்."
பதவியேற்பு விழா உறுதி!
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், மிகுந்த நம்பிக்கையுடன் பேசிய அவர், "வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 108 மணிநேரங்கள் மட்டுமே உள்ளன. சரியாக 109-வது மணிநேரத்தில், எங்கள் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பிரம்மாண்டமான முறையில் பதவியேற்பார். இது உறுதி," என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
எக்சிட் போல் முடிவுகள் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறும் நிலையில், தவெக தரப்பில் முன்வைக்கப்படும் இந்த அதீத நம்பிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications