தவெக நிர்வாகிகளுக்கு சென்ற அவசர அழைப்பு.. நாளை விஜய் முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தல் களத்திற்கு தயாராகி வருகிறார்கள். திமு,க அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சியும் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் விஜய் நாளை அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்காக நிர்வாகிகளுக்கு நேற்று இரவு தகவல் சென்றுள்ளது. இதில் நிர்வாகிகளிடம் பல முக்கிய ஆலோசனை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் தவெக 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அரசியலில் இறங்கியுள்ளது. விஜய் கட்சி தொடங்கி மூன்றாவது வருடத்திற்குள் நுழைய போகிறார். ஜனநாயகன் படத்துடன் திரைப்படத்திற்கு முழுக்கு போட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அந்தக் கட்சியினர் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள்.

தவெக நிர்வாகிகள் ஆலோசனை
தொகுதி வாரியாக விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் கூட்டத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி சுமார் 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு சுமார் 2 மாதங்கள் விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் வெளியில் தலைகாட்டாமல் இருந்தனர். தற்போது விஜய் உள்ளிட்டோர் அரசியல் களத்தில் ஆக்டிவாக வலம் வரத்தொடங்கிவிட்டனர்.
செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் சமீபத்தில் தவெகவில் இணைந்துள்ளனர். இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நேற்று புதுச்சேரி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். வருகிற 18 ஆம் தேதி அவர் ஈரோடு மாவட்டத்திற்கு செல்லவுள்ளார். இதன் தொடர்ச்சியாக நாளை (11.12.2025) தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
விஜய் திட்டம்
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், "தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் விஜய் அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். பனையூர் தவெக அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணங்கள், எஸ்ஐஆர் பணிகள் ஆய்வு, தேர்தல் வியூகம், பூத் கமிட்டி வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. பல மாவட்டங்களில் பூத் கமிட்டி பணிகள் சுணக்கமாக உள்ளது. தலைமையில் இருந்து வரும் உத்தரவுகளை மாவட்ட செயலாளர்கள் பின்பற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. மேலும் புகார்கள் அதிகமுள்ள நிர்வாகிகளுக்கு வார்னிங் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்." என்றனர்.












Click it and Unblock the Notifications