களம் எட்டில் ஆட்டம் மாறுது.. களத்துக்கு வரும் விஜய்.. அஜித்குமார் வழக்கில் போராட்டம்
சென்னை: சிவங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு தவெக சார்பில் போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்தப் போராட்டத்தில் விஜய் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார். கோயிலுக்கு வருகை புரிந்த பக்தரின் நகை காணாமல் போன வழக்கில், திருப்புவனம் காவல்துறையினர் அஜித்திடம் விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினர் அவரை கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள் காவல்துறையை கண்டித்தன. திமுக அரசு மீதும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்து வருகிறார்கள். தவெக சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டதுடன், அந்தக் கட்சி தலைவர் விஜய் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தார்.
அஜித்குமார் கொலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்று அந்தக் கட்சி கோரிக்கை வைத்தது. மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து தவெக சார்பில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது. இதையடுத்து போராட்டத்துக்கு அனுமதி கேட்டு தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தவெக சார்பில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
அதன்படி அஜித்குமார் சம்பவத்தைக் கண்டித்து சிவானந்தா சாலையில் தவெக சார்பில் வருகிற 13 ஆம் தேதி காலை போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் போராட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தவெக கட்சி தொடங்கி கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடம் ஆன நிலையில், அந்தக் கட்சி தலைவர் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை நேரில் சந்தித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஆளுநர் ரவியை சந்தித்த விஜய், சமீபத்தில் அஜித்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்தார்.
சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், விஜய் இன்னும் ஆக்டிவ் அரசியலில் இறங்கவில்லை. விஜய் கூறியபடி அவரின் கடைசிப் படமான ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டது.
தவெகவின் இரண்டாவது மாநாடு, பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் என்று விஜய் அடுத்தடுத்து திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு தவெக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் விஜய்யும் கலந்து கொள்வார் என்று நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4 வருடங்களில் நடைபெற்ற 24 கஸ்டடி மரணங்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக, அதிமுக முழு வீச்சில் பணியாற்றி வரும் நிலையில், தவெகவும் களத்தில் இறங்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications