மயில்சாமி முதல் பிரகாஷ் ராஜ் வரை விசில் சின்னத்தில் இதுவரை போட்டியிட்டவர்கள் யார் யார்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தவெகெ டிக் செய்த முதல் சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். விசில் சின்னத்தில் இதற்கு முன்பாக போட்டியிட்டவர்கள் விவரங்களை பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தவெக என்ற கட்சியை தொடங்கினார். தவெகவை பொறுத்தவரை பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட இருக்கும் தவெக சார்பில் சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.

விஜய் கட்சிக்கு விசில் சின்னம்
விஜய் கட்சி தரப்பில் கிரிக்கெட் பேட், ஆட்டோ, விசில், வெற்றிக் கோப்பை உள்ளிட்ட 9 சின்னங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்குமாறு கோரப்பட்டு இருந்தது. இதில் தவெக கேட்ட சின்னமான விசில் சின்னமே அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியதால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட பிரச்சினை என கடந்த ஒரு மாத காலமாக சோர்ந்து இருந்த தவெகவினருக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியது உற்சாகத்தை கொடுத்துள்ளது. விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட சில நிமிடங்களில் தவெகவினர் அதனை சமூக வலைத்தளங்களில் வைரல் செய்து வருகிறார்கள்.
நடிகர் மயில்சாமி, பிரகாஷ்ராஜ்
தமிழகம் முழுவதும் விசில் சின்னத்தில் தவெக போட்டியிட முடியும். அதே நேரத்தில், தவெக போட்டியிடாத தொகுதிகளில் பிற வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்கள் பட்டியலில் விசில் சின்னமும் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
விஜய்க்கு தற்போது ஒதுக்கப்பட்டு இருக்கும் விசில் சின்னம் இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் சுயேச்சை வேட்பாளர்கள் பலருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக நடிகர் மயில்சாமி போட்டியிட்டார். அவருக்கு இந்த விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சி
அதேபோல கர்நாடகாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜுக்கு இந்த சின்னமே ஒதுக்கப்பட்டு இருந்தது. சட்டமன்ற தேர்தல்கள் மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல்களில் விசில் சின்னம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜெயப்பிரகாஷ் நாராயணன் 2009-ல் தேசிய அளவில் தொடங்கிய லோக்சத்தா கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
அதேபோல கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழருவி மணியன் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியிருந்தது. ஊழல், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை whistle blowers என அழைப்பது வழக்கமாக உள்ளது. ஆம் ஆத்மி தேர்தல் அரசியல் கட்சியாக மாறுவதற்கு முன் இயக்கமாக இருந்தபோது விசிலை அதிகம் பயன்படுத்தியது.
விஜய்யின் வி செண்டிமெண்ட்
விசில் சின்னத்தை பொறுத்தவரை விஜய்க்கு வி செண்டிமென்டும் வொர்க் ஆகி உள்ளதாக தவெகவினர் உற்சாகமாக கூறி வருகிறார்கள். அதாவது, விஜய் கட்சி தொடங்கியதில் விக்கிரவாண்டி வி சாலையில் தனது முதல் மாநாட்டை நடத்தினார். தற்போது வி என்ற சொல்லில் தொடங்கும் விசில் சின்னமே அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications