9வது முறை சர்ப்ரைஸ் வரலாறு! கோபிச்செட்டிப்பாளையத்தில் விசில் அடித்த செங்கோட்டையன்! தவெக முதல் வெற்றி
சென்னை: தவெகவின் முதல் வேட்பாளராகக் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட கே.ஏ. செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார்.. மாநிலம் முழுவதும் தவெக வேட்பாளர்கள் பல இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், அக்கட்சியின் முதல் வெற்றியை செங்கோட்டையன் பதிவு செய்துள்ளார்.. 9-வது முறையாக சட்டமன்றம் செல்லும் இவரின் இந்த வெற்றி, தவெகவினரிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
கொங்கு மண்டலத்தின் அரசியல் வரலாற்றில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி எப்போதும் தனித்துவமானது. ஆனால், இந்த முறை அந்தத் தொகுதி எதிர்கொண்ட தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத ஒரு பரபரப்பைத் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது.

அதிமுகவின் அசைக்க முடியாத அடையாளமாக, கடந்த பல வருடங்களாகவே அந்த மண்ணின் அடையாளமாக திகழ்ந்த கே.ஏ. செங்கோட்டையன், இந்த முறை புதிய சின்னத்தில், புதிய களத்தில் நின்றதே அந்தப் பரபரப்பிற்கு முக்கிய காரணம். அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் இடையில், தனது கோட்டையை மீண்டும் ஒருமுறை செங்கோட்டையன் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
அனல் பறந்த மும்முனைப் போட்டி
1980-களில் அரசியல் பயணத்தைத் தொடங்கிய செங்கோட்டையன், 1989 முதல் கோபி தொகுதியைத் தனது சாம்ராஜ்யமாகவே வைத்திருந்தார். 2001-ம் ஆண்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு தேர்தலைத் தவிர, மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அவரே வெற்றி வாகை சூடினார்.
ஆனால், இம்முறை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கடும் கருத்து வேறுபாட்டால், அக்கட்சியிலிருந்து வெளியேறி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இரட்டை இலை இல்லாமல், விசில் சின்னத்தில் அவர் களம் கண்டது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கோபி தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் தவெக என மும்முனைப் போட்டி உருவானது.
வாக்குகளைச் சிதறடித்த அரசியல் மாற்றம்
கடந்த 26 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியாமல் தவித்து வந்த திமுக, அதிமுகவின் இந்த உள்முரண்பாட்டைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளத் துடித்தது. வாக்குகள் சிதறினால் உதயசூரியன் உதயமாகும் என திமுக நம்பியது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தரப்போ, இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில்தான் உண்மையான விசுவாசிகள் இருப்பார்கள் எனச் சவால் விடுத்தது. இதனால், கோபி தொகுதியின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் தமிழகம் முழுவதும் தொற்றிக் கொண்டது.
அனுபவம் வென்றது - 9-வது முறையாக எம்.எல்.ஏ
இன்று வெளியான தேர்தல் முடிவுகள் அனைத்துக் கணிப்புகளையும் முறியடித்துள்ளன. தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே செங்கோட்டையன் முன்னிலை வகித்து வந்தார். இறுதியில், 75,635 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தனது அரசியல் வாழ்வில் 9-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
தொடர்ச்சியாக 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ள செங்கோட்டையன், கட்சி மாறினாலும் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளார்.
சின்னம் எதுவாக இருந்தாலும், பல ஆண்டுகால மக்கள் பணியும், அனுபவமும் ஒரு தலைவனை ஒருபோதும் கைவிடாது என்பதற்கு கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் இந்தத் தீர்ப்பு ஒரு சான்றாக அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் தவெக கணக்கைத் தொடங்கியுள்ள இந்த வெற்றி, வரும் காலங்களில் தமிழக அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications