தவெகவின் 4 மெகா சொதப்பல்கள்.. திக்கு தெரியாத திசையில் விஜய்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தவெக இடத்தில் திமுக, அதிமுக இருந்திருந்தால் இந்நேரம் ஆட்சியை பிடித்திருப்பார்கள். முதிர்ச்சியில்லாத நபர்களின் செயல்பாட்டால் விஜய் திக்கு தெரியாத திசையில் பயணித்து கொண்டிருக்கிறார். என்ன நடக்கிறது தவெகவில்.
தவெக கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே போதிய அனுபவம் இல்லாமல் தடுமாறி வருகிறார்கள். பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைக்க முடியாதது தொடங்கி விஜய்யின் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் சர்ச்சைளை கிளப்பின. எந்த பிரச்சனைக்கு யாரை அணுக வேண்டும், எந்த அதிகாரி எங்கு பணியாற்றுகிறார் என்பது கூட தெரியாமல் உள்ளனர்.

தவெக செய்த தவறு
கரூர் கூட்ட நெரிசல் துயரத்தை கூட தவெகவினர் சரியாக கையாளவில்லை. தேர்தலில் சரியாக பிரச்சாரமும் இல்லை. இவ்வளவு அலட்சியமாக இருந்தாலும் தேர்தலில் மக்கள் தவெகவுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர். 108 தொகுதிகளுடன் தவெக தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளுநரிடம் உரிமை கோரியதிலும் சொதப்பியுள்ளனர்.
ஆட்சி அமைப்பதற்கான வழிமுறைகளே அவர்களுக்கு தெரியவில்லை. ஆளுநர் மாளிகை சொல்லியும் அதை பின்பற்றவில்லை. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால், எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று தான் ஆளுநரிடம் கேட்டிருக்க வேண்டும். அவசரத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி என்று உரிமை கோரினார்கள்.
மோசமான அணுகுமுறை
சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பாஜக ஆளுநரை வைத்து அரசியல் செய்து வருகிறது. செங்கோட்டையன், ஜே.சி.டி.பிரபாகர் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கட்சியில் இருந்தும் அவர்களின் பேச்சை ஆதவ், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் கேட்கவில்லை. விஜய்யும் அவர்களின் குரலுக்கு மதிப்பு கொடுக்க தவறிவிட்டார். இதுதான் அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கு காரணம்.
அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் மூலம் தான் கம்யூனிஸ்ட்கள், விசிக ஆகிய கட்சிகளுடன் பேசியிருக்க வேண்டும். ஜான் ஆரோக்கியசாமி தன்னுடைய நண்பர்கள் மூலம் பேச வைத்துள்ளார். இந்த அணுகுமுறையை விசிக மற்றும் கம்யூனிஸ்ட்கள் விரும்பவில்லை. அவர்களின் முதிர்ச்சியற்ற பேச்சால் அதிருப்தியடைந்தவர்கள், விஜய்யை பேசச் சொல்லுங்கள் என கூறிவிட்டனர்.
விஜய்க்கு எதிராக ஸ்லீப்பர் செல்கள்
திமுக அல்லது அதிமுக கட்சிகள் தவெக போல பெரும்பான்மையான இடத்தை கைப்பற்றியிருந்தால், இந்த நேரத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்தி ஆட்சியமைத்திருப்பார்கள். பல்வேறு சட்ட நிபுணர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றத்தில் தான். ஆளுநர் மாளிகையில் இல்லை என கூறியுள்ளனர்.
ஆனாலும் தவெக சார்பில் வழக்கு தொடராமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றும், தவெக ஆட்சியமைக்க, விஜய் முதலமைச்சராக முடியாமல் போனதற்கு அவருடன் உள்ள அனுபவம் இல்லாதவர்களின் செயல்பாடுகளே காரணமாகவுள்ளது.












Click it and Unblock the Notifications