விஜய் ஒரு குட்டி எடப்பாடி.. தவெகவை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டனர்.. தனியரசு அட்டாக்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆதவ் அர்ஜுனா டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு விமர்சித்துள்ளார். விஜய்க்கு சுயசிந்தனை இல்லை என்று கூறியுள்ள தனியரசு, விஜய் குட்டி எடப்பாடி பழனிசாமி என்றும் சாடியுள்ளார்.
கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான தனியரசு சில நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். திமுக கூட்டணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக சாடி வருகிறார் தனியரசு.

இந்த நிலையில் ஒன் இந்தியா யூடியூப் சேனல் தரப்பில் தனியரசிடம் நேர்காணல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனியரசு பேசுகையில், விஜய் பாஜகவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். அதனால் தான் விஜய்யை குட்டி எடப்பாடி பழனிசாமி என்று சொன்னேன். ஒரு அறிக்கையில் 4 வரிகள் பாஜகவுக்கு எதிராக எழுதிவிடலாம்.
ஆனால் திமுகவுக்கு எதிராக என்றால் மட்டும் பெரிதாக மேடையை போட்டு பேசுகிறார்.. கொள்கை எதிரி பாஜக என்று சொல்கிறார். ஆனால் இதுவரை விஜய் என்ன கொள்கை என்று சொன்னதே இல்லை.. எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி அதிமுகவின் கொள்கை தெரியாதோ, அதேபோல் விஜய்க்கு தவெகவின் கொள்கை என்னவென்று தெரியாது. இவர்கள் இருவருக்கும் அரசியலும் தெரியாது.
அம்பேத்கர் எந்த மாநிலம் என்று கூட விஜய்க்கு தெரியாது. தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்னவர் யாரென்று கேட்டால், விஜயகாந்த் என்கிறார்கள். சினிமாவில் இருந்து வந்த கூட்டம் தான் அவர்கள்.. நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை என்று விஜய்க்கும் தெரியவில்லை.. பேப்பரை பார்த்துதான் விஜய்யே சொல்கிறார். கொள்கை தெரியாமல் இருப்பது கடந்து போகக் கூடிய விஷயம் அல்ல.
சினிமாவில் இருப்பதை போலவே விஜய் அரசியலிலும் இருக்கிறார். அதேபோல் தமிழக அரசியலுக்கு புதிதாக ஒரு அரசியல் விஞ்ஞானி வந்துள்ளார். திமுகவில் இருந்து விசிக சென்று, அங்கிருந்து தவெகவுக்கு சென்றுள்ளார் ஆதவ் அர்ஜுனா. இவர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஆனால் கட்சிப் பெயர் மட்டும் தமிழக வெற்றிக் கழகம்.
தமிழக காவல்துறை, அதிகாரிகள் என்று யாரையும் நம்ப மாட்டார்கள். ஜாமின் வாங்குவதற்கும், பாஜக அரசியலுக்கும் மட்டும் டெல்லி வேண்டும். ஆனால் ஓட்டு போட மட்டும் தமிழக மக்கள் தேவை.. டெல்லியில் மட்டும் தான் நீதி கிடைக்கும் என்று தவெக எப்படி வந்தது? தவெகவின் கடைசி தொண்டனுக்கு பிரச்சனை என்றாலும், டெல்லியில் இருந்து ஆர்டர் வாங்கிவிட்டு வருவேன் என்கிறார் ஆதவ் அர்ஜுனா..
இவர்களை நம்பி மக்கள் தவெகவில் குவிகிறார்கள். நடிகர்கள் நாடாளக் கூடாது என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். விஜய் வயதான நடிகர் தான். உடல் எடைக் குறைவாக இருந்தாலும், அரை மணி நேரம் கூட பேச முடியவில்லை. சுயசிந்தனையுடன் பேச முடியவில்லை.. விஜய்யை மக்கள் சூப்பர்மேனாக நினைக்கிறார்கள். ஆனால் யதார்த்தத்தில் விஜய் அப்படி இல்லை என்று தெரிவித்துள்ளார். தனியரசுவின் முழுமையான பேட்டியை ஒன் இந்தியா தமிழ் யூடியூப் பக்கத்தில் காணலாம். இதே செய்தியில் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications