நெஞ்சில் பாலை வார்த்த டிவிஎஸ்! “பழுதான பைக்குகளை கொண்டுவாங்க..” சரி செய்து கொடுப்பதாக அறிவிப்பு
சென்னை: புயல் வெள்ளத்தால் வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பழுதான வாகனங்களை சரி செய்து கொடுக்க டிவிஎஸ்(TVS) நிறுவனம் முன்வந்திருக்கிறது.
கடந்த 4ம் தேதி சென்னையை கடந்து சென்ற மிக்ஜாம் புயலால் மக்கள் ஏராளமான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றனர். புறநகர் மற்றும் வடசென்னையின் சில பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாமல் இருக்கிறது. பல இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. இது ஒருபுறம் எனில் மறுபுறம் வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இஎம்ஐ மூலம் எடுத்த பைக்குகளும், கார்களும் தற்போது முற்றிலும் பழுதாகி நின்றுக்கொண்டிருக்கிறது.

மழை வெள்ளம் முற்றிலுமாக வடிந்த பின்னர், சில மணி நேரம் கழித்துதான் தங்களது வாகனங்களை தேடி கண்டுபிடித்ததாக மக்கள் கூறுகிறார்கள். வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகள்தான் இருக்கின்றன. பைக்குகளுக்கு அடுத்து ஆட்டோக்கள்தான் அதிக அளவில் சேதம் அடைந்திருப்பதால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
வெள்ளத்தால் கடந்த ஒரு வாரமாக வருமானம் இன்றி தவிக்கும் சாமானிய மக்களுக்கு பைக், ஆட்டோக்கள் மேலும் செலவை இழுத்திருக்கிறது. எனவே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் வாகனங்களை பழுதுநீக்கும் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா கூறும்போது, "வெள்ளத்தில் பல வாகனங்கள் மூழ்கி சேதமடைந்துவிட்டன. அவற்றை சரி செய்ய சிஎஸ்ஆர் பதிவு செய்து இலவச முகாம்கள் நடத்தப்படும். காப்பீடு கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், மிக்ஜாம் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசுக்கு ரூ.3 கோடியை நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறது. மற்றபடி வெள்ளத்தால் பழுதடைந்த வாகனங்களை சரி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் டிவிஎஸ்(TVS) நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உதவ முன்வந்திருக்கிறது.
அதாவது, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், வேலைக் கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது. 18ம் தேதி வரை இச்சலுகை நடைமுறையில் இருக்கும் என்றும் வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து வாகனங்களை சர்வீஸ் செண்டருக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் டிவிஸ் நிறுவனம் கூறியிருக்கிறது இப்படி சர்வீஸுக்கு கொண்டு வரும் வாகனங்களின் எஞ்சினை RESTART செய்ய வேண்டாம் என்றும் நிறுவனம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சென்னை மக்களின் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறது. பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications