#ReleaseNandhini நந்தினியை விடுதலை செய்.. இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
நந்தினியை விடுதலை செய்ய கோரி, ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது
சென்னை: அடுத்த வாரம் கல்யாணம் நடைபெறவுள்ள நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நந்தினியை விடுதலை செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் #ReleaseNandhini ஹேஷ் டேக்கில் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, 8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்ப்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்து போராடி வருபவர் நந்தினி. இவர் ஒரு வக்கீல்!
2014-ம் ஆண்டு டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் திருப்பத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குறுக்கு விசாரணையின்போது, "டாஸ்மாக்கில் விற்பனை செய்வது போதைப் பொருளா? உணவுப் பொருளா? இல்லை மருந்து பொருளா?, IPC 328ன் படி டாஸ்மாக் மூலம் போதைப் பொருள் விற்பது குற்றமில்லையா? என்று நந்தினி வாதாடினார். இதனால், இது போன்ற கேள்விகளை எழுப்ப மாட்டோட்ம என்று எழுதி கையெழுத்து போட்டு தருமாறு நீதிபதி கேட்டார். ஆனால் நந்தினியும், அவரது தந்தையும் எழுதி கொடுக்க மறுத்தனர். இதனால்
நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி இருவரையும் கைது செய்து, வருகிற 9-ம தேதி வரை மதுரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. வருகிற 5-ம் தேதி நந்தினிக்கு கல்யாணம் ஆக உள்ள நிலையில், வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கைது நடவடிக்கை உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.
இதையடுத்து, நந்தினியை விடுதலை செய்யவேண்டும் என்று சோஷியல் மீடியாவில் #ReleaseNandhini என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் இந்த ஹேஷ்டேக்கில், நந்தினிக்கு ஆதரவான கருத்துக்களை பலர் பதிவிட்டு வருகிறார்கள். இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.