மாட்டிக்காமல் நகை பறிப்பது எப்படி..யூடியூப் பார்த்து திருட போய்..சென்னையில் தொக்காக சிக்கிய நபர்கள்
திருவள்ளூரில் போலீசிடம் மாட்டிக்கொள்ளாமல் நகை பறிப்பது எப்படி என்று வீடியோ பார்த்துவிட்டு திருட வந்தவர்கள் முதல் முயற்சியிலேயே போலீசிடம் சிக்கியுள்ளனர்.
சென்னை: போலீசிடம் மாட்டிக்கொள்ளாமல் நகை பறிப்பது எப்படி என்று வீடியோ பார்த்துவிட்டு திருட வந்தவர்கள் முதல் முயற்சியிலேயே போலீசிடம் சிக்கியுள்ளனர். இதனால், பல திட்டங்களுடன் திருடுவதற்கு போய் மாட்டிக் கொண்ட பிறகு ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகப்போனதே என்று புலம்பிய படி இரு திருடர்களும் முழித்துள்ளனர்.
இணைய ஆதிக்கம் பெருகிவிட்ட தற்போதைய நவீன யுகத்தில் எந்த ஒரு தகவலாக இருந்தாலும் எளிதில் இணையத்தில் தேடி தெரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல், யூடியூப் போன்ற தளங்களிலும் தெரியாத விஷயங்களைக் கூட பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
இதுபோன்ற இணைய தளங்களை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பலர் பயன்படுத்தினாலும், ஒரு சிலர் குறுக்கு வழியில் பணம் ஈட்டவும் யூடியூப் போன்ற தளங்களில் ஐடியாவை தேடுகின்றனர்.

யூடியூப் வீடியோ பார்த்து
அப்படித்தான் யூடியூப்பில் பார்த்து வெடிபொருட்கள் தயாரிக்க முயற்சிப்பது.. ஏ.எடி.எம் மோசடியில் ஈடுபட நினைப்பது என சிலர் தவறான செயல்களிலும் இணையத்தை பயன்படுத்தி விடுகின்றனர். இதேபோலத்தான் சென்னையில் இரண்டு பேர், எதோ புதிதாக தொழிலை ஆரம்பிப்பதற்கு ஐடியா தேடுவது போல நகை பறிப்பில் ஈடுபட யூடியூப்பில் வீடியோ பார்த்துள்ளனர். அதிலும் போலீசிடம் மாட்டிக்கொள்ளாமல் நகை பறிப்பது எப்படி என்று ஐடியாவை கண்டுபிடித்து நகை பறிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

4 பவுன் தங்க சங்கிலி
ஆனால், முதல் சம்பவத்திலேயே போலிசாரிடம் தொக்காக சிக்கிக் கொண்டு தற்போது கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை பற்றிய விவரம் வருமாறு:- ராமாபுரத்தை சேர்ந்த ராதா என்பவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பைக்கில் பின் தொடர்ந்த இருவர் ராதா அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றனர். இதனால் பதறியடித்த ராதா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவி கேமிரா மூலம்
இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் இரு நபர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதனால், இரு சக்கர வாகனம் செல்லும் திசை ஆகியவற்றை தொடர்ந்து சிசிடிவி கேமிரா மூலம் போலீசார் நோட்டமிட்டனர். இதில் ராதாவிடம் நகையை பறித்தது இவர்கள்தான் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

இருவரும் கைது
தொடர்ந்து அவர்களை தீவிரமாக போலீசார் தேடினர். நகை பறித்த பிறகு பைக் எந்த சாலை வழியாக செல்கிறது என்பதை அப்பகுதியில் உள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்தே கண்காணித்தனர். கடுமையான தேடுதல் வேட்டைக்குப் பிறகு நகைப்பறிப்பில் ஈடுபட்ட இருநபர்களின் அடையாளமும் தெரியவந்தது. நகைப்பறிப்பில் ஈடுபட்டவர்கள் மதுரவாயல் மற்றும் நெற்குன்றத்தை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications