டீக்கடைக்காரரின் QR codeஐ மாற்றி நூதன மோசடி செய்த இருவர் கைது.. சென்னை ஓஎம்ஆரில் ஷாக்!
சென்னை: QR code ஐ தயாரித்து டீக்கடைகளில் ஒட்டி பணத்தை தன் வங்கிக் கணக்கில் வரவழைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
சென்னை பழைய மகாபலிபுர சாலை, கந்தன்சாவடியில் செல்வம் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருபவர் துரை (40). இவரது டீக்கடைக்கு வந்த மர்ம நபர்கள் இருவர் கடையில் அங்கு பணம் செலுத்த வைக்கப்பட்டிருக்கும் QR Code ல் தாங்கள் தயாரித்த QR Code ஸ்டிக்கரை ஒட்டி தங்களது வங்கிக் கணக்கை இணைத்து பணத்தை நூதன முறையில் எடுத்து வந்துள்ளனர்.

வரவு செலவு
டீக்கடைக்காரர் தனது வங்கிக் கணக்கில், வரவு செலவு கணக்கை பார்த்த போது பணம் குறைவது தெரியவந்தது. அதன் பிறகு சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் இரு நபர்கள் சுவற்றில் ஒட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது தெரிந்தது.

பணம் செலுத்துதல்
அதன் பிறகு தான் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், QR கோடில் பணம் செலுத்தினால் மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் போவதை அறிந்து கொண்ட டீக்கடைக்காரர் துரை இது குறித்து சிசிடிவி காட்சிகளோடு துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

8 ஸ்டிக்கர்கள் பறிமுதல்
புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு QR கோடு ஒட்டி பணத்தை திருடி வந்த கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த ராபர்ட் (32), வல்லரசு (21), ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 போன் பே QR கோடு ஸ்டிக்கர் பறிமுதல் செய்யப்பட்டது.

திருட்டுத்தனமாக சம்பாதித்த இருவர்
விசாரணையில் வல்லரசு என்பவர் போன் பே நிறுவத்தில் வேலை பார்த்ததும் அதன் பிறகு வேலையை விட்டு நின்று விட்டதாகவும், வல்லரசு தனது நண்பரான சீனிவாசன் என்பவரது வங்கிக் கணக்கை QR கோட்டுடன் இணைத்து பல்வேறு கடைகளில் QR கோட்டிற்கு மேல் ஒட்டி திருட்டுத்தனமாக பணத்தை சம்பாதித்து வந்தது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மேலும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications