736 லட்சம் ரூபாய் மானியம்.. செய்து காட்டிய சேலம்.. ஸ்டாலின் திட்டம் தந்த 2 இளம் முதலாளிகள்
சென்னை: ஏஞ்சல் முதலீட்டில் தமிழ்நாடுதான் நம்பர் ஒன். அந்நிய முதலீடுகளை எந்த அளவுக்கு ஈர்க்க வேண்டும் என்று எவ்வளவு தீவிரமாகத் திட்டம் தீட்டி வருகிறாரோ, அதே அளவுக்கு மாநிலத்தில் புதிய தொழில்முனைவோர்களையும் உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் இயங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஆகவேதான் புதிய தொழில்முனைவோருக்கு இதுவரை இருந்துவந்த 45 என்ற வயது வரம்பை 55 என உயர்த்தி தந்துள்ளார் ஸ்டாலின். அதன் மூலம் புதிய தொழில் பெருகும். பல தொழிலாளர்கள் பயனடைவர். அதன் வழியாக ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் எனப் பல கோணங்களில் பார்த்துப் பார்த்து திட்டங்களைக் கூர் தீட்டி வருகிறார்.

சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 மாதங்களில் 736 லட்சம் ரூபாய் புதிய தொழில்முனைவோருக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்கிறார் அந்த மாவட்ட அதிகாரி.
மேலும் ஸ்டாலின் கொண்டுவந்துள்ள திட்டம் இம்மாவட்டத்தில் 2 புதிய முதல் தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்கி இருக்கிறது. தொழிலாளிகளாக இருந்த அந்த இருவரும் இன்று முதலாளியாக முன்னேறி இருக்கின்றனர்.
யார் அவர்கள்? எப்படி நடந்தது.

முதல் முகம் மணிமாறன். இவர் ஒரு பி.இ., எம்.பி.ஏ பட்டதாரி. இவரது தந்தை ஒரு நெசவாளர். சிறுவயது முதலே அந்தத் தொழிலைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர். ஆகவே, இவருக்கு அந்த நெசவு தொழிலைப் பெரிய அளவில் இயந்திரங்களைக் கொண்டு செய்ய வேண்டும் என்று கனவு கண்டார்.
அதற்காக அரசு என்ன மாதிரியான கடனை வழங்குகிறது? அதற்கு எவ்வளவு மானியம் வழங்குகிறது? என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்தார். இன்று தமிழ்நாடு அரசு வழங்கிய கடன் உதவியால் ஒரு தொழில்முனைவோராக வளர்ந்திருக்கிறார்.

அரசின் உதவி குறித்து மணிமாறன் என்ன சொல்கிறார்? அவரது புதிய தொழில் எந்தளவு முன்னேறி உள்ளது? அவரே பதிலளித்தார். "எங்கள் பகுதியில் சிறிய அளவிலான விசைத்தறிகள்தான் செயல்பட்டுவருகின்றன.
இன்றைக்கு இந்தத் தொழிலில் எலெக்ட்ரானிக்ஸ் எந்திரங்கள் வந்துவிட்டன. அதை எல்லாம் நான் சூரத் போய் பார்த்து ஆய்வுசெய்தேன். அதில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு நானும் எங்கள் பகுதியில் எலெக்ட்ரானிக்ஸ் தறியைப் போட்டுள்ளேன்.

கைத்தறியாகப் புடவையை நெய்யும் போது ஒன்றில் ஒரு டிசைன் தான் போடமுடியும். ஆனால், எலெக்ட்ரானிக்ஸ் தறியில் அப்படியில்லை. எத்தனை டிசைன்களை வேண்டுமானாலும் போடலாம். இதனால் அதிகப்படியான டிசைன்ஸ் கிடைக்கும். பலவிதங்களில் நாம் ஒரே சமயத்தில் புடவைகளை நெய்யலாம்.
வழக்கமாகச் செய்யும் பாரம்பரிய நெசவு முறையில் ஒவ்வொரு டிசைன் மாற்றும் போதும் சுமார் 25 ஆயிரம் செலவாகும். அப்படிச் செய்யவில்லை என்றால் ஒரே டிசைனை மட்டும்தான் நெய்ய முடியும்.

ஆனால், இந்த எந்திர முறையில் ஒருமுறை முதலீடு எந்திரத்திற்காகச் செய்வதோடு சரி. எத்தனை டிசைன்கள் வேண்டுமானாலும் மாற்றி மாற்றி ஓட்டலாம். ஒவ்வொரு டிசைனையும் பென் ட்ரைவ் இல் காப்பி செய்து செட் பண்ணிலாம் போதும். அது தானாக நெய்ய ஆரம்பித்துவிடும். இதனால் நமக்கு லாபம் அதிகம்" என்கிறார்
அரசு கடன் எப்படிக் கிடைத்தது?

"அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அரசு இணையதளம் மூலம் ஆன்லைனில் நான் எனது விண்ணப்பத்தைப் போட்டு இருந்தேன். அதிகாரிகள் என்னை அழைத்து நேர்காணல் செய்தார்கள். தொழில் அனுபவம்? எந்தளவுக்குச் செய்ய முடியும்? என்ன பின்புலம்? என அனைத்தையும் விசாரித்தார்கள். திட்ட மதிப்பீட்டைக் கேட்டார்கள். அனைத்தையும் தெளிவாக அளித்தேன்.
உடனடியாக வங்கிக்கடன் கிடைத்தது. அதுவும் 25% மானியத்துடன் கடன் கொடுத்தார்கள். எந்திரங்களை வாங்கிய உடன் எனக்கு வரவேண்டிய மானியம் பணத்தில் 50% வரை நான் பெற்றுவிட்டேன். நான் முதன்முதலாகத் தொழில் தொடங்கவேண்டும் எனத் திட்டமிட்டவுடனேயே அதிகாரிகளின் அணுகுமுறை ரொம்பவே பாசிடிவ் ஆக இருந்தது. அதில் எனக்குப் பெரிய மகிழ்ச்சி" என்கிறார்

சேலம் மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் சிவக்குமார், "சேலத்திலிருந்து மணிமாறன் எங்களை அணுகினார். அவர் எம்.பி.ஏ., படித்தவர். விசைத்தறி தொழில் செய்ய வேண்டி எங்களை அணுகினார்.
அவர் முதல் தலைமுறை தொழில்முனைவோர். ஆகவே தமிழக அரசின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மூலமாக உதவி பெறலாம் என்று அறிவுரை வழங்கினோம்.

இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பித்தால், மானியமும் கிடைக்கும் வட்டி மானியமும் கிடைக்கும் என்று வழிகாட்டினோம். நாங்கள் சொன்னபடியே விண்ணப்பித்தார். அவரது கோரிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டத்தில் வைத்தோம். ஒப்புதல் கிடைத்ததும் வங்கிக் கடன் கிடைத்தது. இன்று அவர் இளம் தொழில்முனைவோராக முன்னேறி இருக்கிறார்.
இத்திட்டத்தில் லாபம் என்னவென்றால், கடன்பெற்று அதற்கான உபகரணங்களை வாங்கியதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் 50% மானியம் உடனே பயனாளிக்குக் கிடைத்துவிடும். இன்று அவருக்கு ஒரே மாதத்தில் பாதி மானியமும் கிடைத்துவிட்டது.

இதில் சிறப்பு என்னவென்றால் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்னாலேயே 50% மானியத்தைப் பெற்றுவிட முடியும். மேலும் 3% வட்டி மானியமும் கொடுக்கிறோம். ஆகவே பயனாளிக்குக் கடன் சுமை அதிகம் இருக்காது. தொழிற்சாலையும் நன்றாக வளர்ந்து வருகிறது.
தமிழக அரசு இத்திட்டத்தில் அதிக அக்கரை காட்டி வருகிறது. கூடுதலான நபர்கள் பலன்பெற வேண்டும் என்று விதிமுறைகளை எளிமைப்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு முன்னதாக பயனாளிகளின் வயது வரம்பு 45 ஆக இருந்தது. அதை 55 ஆக உயர்த்தி அறிவித்துள்ளார். இதனால் மேலும் பல லட்சம் பேர் பயனடைய முடியும்" என்கிறார்

அவர்தான் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இருக்க வேண்டும் என்ற புதிய பார்வையைக் கொண்டுவந்துள்ளார். அதற்காக அண்ணல் அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டம் என்று ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். 2 மாதங்கள் முன்னதாகத்தான் தொடங்கிவைத்தார்.
இதன் மூலம் பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் பயன்பெற முடியும். இதில் திட்ட மதிப்பீட்டில் 35% தொகையை மானியமாக அரசு வழங்குகிறது. மேலும் 6% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் மட்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையான 4 மாதங்களில் 99 பேருக்கு 736 லட்சம் ரூபாயை மானியமாக வழங்கி இருக்கிறோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். சேலம் மாவட்டத்தில் மட்டுமே இவ்வளவு மானியம் வழங்கப்பட்டுள்ளது" என இன்ப அதிர்ச்சி அளிக்கிறார் இந்த அதிகாரி
மணிமாறனைப் போலவே இத்திட்டத்தின் மூலம் தொழில்முனைவோராக உயர்ந்துள்ள இரண்டாவது முகம் குமார். இவர் மேட்டூரைச் சேர்ந்தவர். இவர் ஒரு தனியார் ஸ்டீல் இண்ட்ரஸ்ட்ரி கம்பெனியில் இதற்கு முன்னால் ஊழியராக வேலை பார்த்துவந்தார்.
இன்று அரசு வழங்கிய கடன் உதவியால், 'ஆல்ஃபா ஸ்டீல்ஸ்' கம்பெனியின் முதலாளியாக முகம் மாறி இருக்கிறார். குமார் கம்பி வேலைகளை அமைக்கும் பின்னல் கம்பிகளை உற்பத்தி செய்துவருகிறார். இவரது கம்பெனி தொடங்கி ஆறு மாதங்கள்தான் ஆகின்றன.
"தமிழக அரசு வழங்கிய கடன் உதவியால்தான் இன்று புதிய தொழில்முனைவோராக மாறி இருக்கிறேன். அதிகாரிகளிடம் கடன் கேட்டுப் போகும்போது அவர்கள் முறையாக எந்தத் தாமதமும் இல்லாமல் எனக்கு வழிகாட்டினார்கள்.
எந்த அலைக்கழிப்பும் இல்லை. அலைச்சல் இல்லை. மிக மரியாதையோடு நடத்தினார்கள். இன்று கடன் உதவியுடன் மானியமும் பெற்று தொழில் செய்து வருகிறேன். ஒரே மாதத்தில் 50% மானியம் கிடைத்ததில் எனக்கே ஆச்சரியம். என் தொழிலின் சந்தை நிலவரம் நன்றாகவே இருக்கிறது. உற்பத்தியும் நல்ல முறையில் நடக்கிறது" என்கிறார்












Click it and Unblock the Notifications