சூப்பரா மாறுது! திருவான்மியூர் டைடல் பார்க் சாலை! ரெடியானது புதிய யூ டர்ன் பாலம்.. வெளிவந்த அப்டேட்
சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள டைடல் பார்க் சிக்னல் அருகில் அமைக்கப்பட்டுள்ள 2வது யூ-டர்ன் மேம்பாலம் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இதனால், இந்த யூ டர்ன் மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு பயணிகள் இடையே ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன நெரிசலும் அதிகரித்து வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு மேம்பாலங்கள் அமைப்பது உள்பட நெரிசலை குறைப்பதற்கான பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தான் சென்னையில் முக்கிய சாலையாக உள்ள ஒம்.எம்.ஆர் சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதில் திருவான்மியூர், தரமணி, மத்திய கைலாஷ், துரைப்பாக்கம் பகுதிகளை இணைக்கும் சந்திப்பாக டைடல் பார்க் உள்ளது. ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை சாலையை இணைக்கும் டைடல் பார்க் போக்குவரத்து சிக்னல் இருக்கிறது.
ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள இந்த சாலையில், டிராபிக் நெரிசல் எப்போதும் அதிகமாக இருக்கும். டைடல் பார்க் சந்திப்பை வாகனங்கள் கடக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். பீக் நேரங்களில் அரை மணி நேரம் கூட ஆகிவிடும். இதனால் வாகன ஓட்டிகள் திண்டாடிப்போவார்கள். இதனை கருத்தில் கொண்டு, ராஜீவ் காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே 'யூ' டர்ன் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த பாலம் திறக்கப்பட்டது. இந்தநிலையில்தான், அப்பகுதியில் டிராபிக்கை மேலும் குறைக்கும் விதமாக திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் மற்றும் சிஎஸ்ஐஆர் சாலை நோக்கி வாகனங்கள் செல்லும் வகையில், 'யூ' வடிவ மேம்பாலம் கட்ட சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, டைடல் பார்க் அருகில் 2-வதாக 'யூ' டர்ன் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது.
ரூ.18 கோடியில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்து விட்டது. இதனால், அடுத்த மாதம் வாகன போக்குவரத்திற்காக மேம்பாலத்தை திறக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள யூ டர்ன் மேம்பால பணிகள் முடிந்துவிட்டது.
சர்வீஸ் சாலை மற்றும் ஒருபக்கம் சாய்வு தளம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இதை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யூ டர்ன் மேம்பாலத்தை திருவான்ம்யூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகனங்கள் யூ டர்ன் எடுக்க பயன்படுத்தலாம். வாகனங்கள் இடதுபுறம் திரும்பி மேம்பாலத்தில் ஏறி, யூ-டர்ன் எடுத்து, டைடல் பார்க் செல்லும் சாலையில் இறங்கி செல்ல வசதி உள்ளது" என்றார்.
சென்னை டைடல் பார்க் மற்றும் மத்திய கைலாஷ் பகுதியில் டிராபிக் நெரிசல் அதிக அளவில் இருக்கும். இதனால், இந்த யூ டர்ன் பாலம் திறந்த பிறகு, போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications