தமிழின் கருவூலம் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர்! தமிழுக்காக இவர் ஆற்றிய தொண்டு தெரியுமா?
சென்னை: தமிழுக்காக அளப்பறிய தொண்டாற்றி மறைந்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் பற்றித் தான் இன்றைய Throw back stories வரிசையில் பார்க்க இருக்கிறோம்.
இவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் எத்தனையோ அரிய தமிழ்ச் சுவடிகள் அழிந்து போயிருக்கும்.
திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தை பூர்விகமாக கொண்டவர் உ.வே.சா. இதனால் தான் உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன் என்பது உ.வே.சா.விற்கான பெயர் காரணமாக அமைந்திருக்கிறது.
உ.வே.சாமிநாதையர், அரிய பல தமிழ்ச் சுவடிகளைத் திரட்டியும், தொகுத்தும் தமிழுலகிற்குத் தந்து அருந்தமிழ்த் தொண்டு ஆற்றியவர். இவர் மட்டும் இப்பணியைச் செய்யாமல் போயிருந்தால் எத்தனையோ அரிய தமிழ்ச் சுவடிகள் கரையானுக்கு இரையாகி இருக்கும் அல்லது காலப்போக்கில் மறைந்து போயிருக்கும்.

செம்மொழித் தமிழின் கருவூலங்கள் ஓலைச் சுவடிப் புதையலில் இருந்து அச்சு வடிவில் பதிப்பித்து அளித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கிய நூல்களுள் பலவற்றையும்,தமிழ் விடுதூது போன்ற வேறு பல அரிய தமிழ் நூல்களையும் அச்சு வடிவில் எதிர்காலத் தலைமுறையினருக்கு கொண்டு சென்றவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்.
இவ்வாறு தமிழ்ச்சுவடிகளைத் தேடிச் சேகரித்துப் பிழைகளைத் திருத்தி, உரைக்குறிப்பு அளித்து, அச்சிட்டு, நூல்களாகக் கொணர்ந்து தமிழுக்கு வளம்
சேர்த்த இத்தமிழ் அறிஞரின் பணி தமிழ் உலகில் என்றென்றும் நிலைத்து போற்றுதற்குரியதாகும்.
புறநானூற்றை உ.வே.சாமிநாதையர் பதிப்பித்ததன் மூலம், தமிழர் வரலாறு, ஆட்சிமுறை, பண்பாடு, மொழி, உள்ளிட்ட வரலற்றுத் தரவுகள் கிடைக்கப்பெற்றன. இதனால் தான் புறநானூற்றை வெறும் இலக்கியமாக மட்டும் கருதாமல் வரலாற்று ஆதாரங்களுக்கான தரவு நூலாகவும் உ.வே.சா. கருதினார்.
புறநானூறு நூல் பதிப்பு மூலம் தான் ஜி.யு.போப்பின் அறிமுகமும், நட்பும் உ.வே.சா.வுக்கு கிடைத்தது. ஜி.யு.போப் காலமாகும் வரை இவர்களுக்கு இடையேயான கடிதப் பரிமாற்றம் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல்வேறு பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்ட தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதயைர் பெயரில் கடந்த 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டு அவரை கவுரவப்படுத்தியது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
மேலும் இவரின் நினைவைப் போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications