கல்வி தான் யாராலும் அழிக்கவே முடியாத ஆயுதம்! ஒரு லேப்டாப் இருந்தாலே உலகம் உங்கள் கையில்.!- உதயநிதி
சென்னை: அரசு சார்பில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஒரு லேப்டாப், இணைய வசதி, புதிய யோசனை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்றார். மேலும், படிக்காமல் வென்றவர்கள் சிலர் தான் என்றும் படிப்பால் வென்றவர்களே இங்கு பல லட்சம் பேர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. "உலகம் உங்கள் கையில்" என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றைய தினம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி வரவேற்புரை ஆற்றினார். பெரியார் தொலைநோக்குப் பார்வையில் அன்று சொன்னவை, இன்று அறிவியல் கண்டுபிடிப்புகளாகி உள்ளன என்ற உதயநிதி, அப்போதே வீடியோ கால் குறித்து பெரியார் பேசியிருந்தார் என்றும் அவை தான் இப்போது அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் நிகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவில் ஐடி துறைக்கே அடித்தளமிட்டவர் கருணாநிதி என்றும் உதயநிதி தெரிவித்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப் நிச்சயம் பயன் தருபவையாக இருக்கும் என்றும் உதயநிதி தெரிவித்தார். மைக்ரோசாப்ட், பேஸ்புக், ஸ்பேஸ்எக்ஸ் என உட்பட உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் தொடங்கியது ஒரு லேப்டாப்பில் தான் என்றும் ஒரு லேப்டாப், இணைய வசதி, புதிய யோசனை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்றும் உதயநிதி தெரிவித்தார்.
கல்வி தான் யாராலும் திருட முடியாத, அழிக்க முடியாத ஆயுதம் என்ற அவர், படிப்பு இல்லாமல் வென்றவர்கள் 100 பேர் என்றால், படிப்பால் வென்றவர்கள் லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றும் பேசினார்.












Click it and Unblock the Notifications