ஒரே ஒரு நாள்! மக்கள் கோரிக்கையை ஏற்று.. சேப்பாக்கத்தில் டாஸ்மாக்-ஐ மூடிய உதயநிதி.. குவியும் பாராட்டு
சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டசபை உறுப்பினராக உள்ள உதயநிதி, தனது தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் தொகுதி மக்களிடையே பாராட்டுகளை அள்ளி வருகிறார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தவர் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி. எதிர்க்கட்சியின் கூட்டணி முதல் எய்ம்ஸ் மருத்துவமனை வரை அவரது பிரசாரங்களுக்கு லைக்ஸ்கள் அள்ளின.
தேர்தல் தேதிகள் எல்லாம் அறிவிக்கப்படும் முன்னரே களத்தில் இறங்கி பிரசாரத்தைத் தொடங்கியவர் உதயநிதி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரில் பிரசாரத்தைத் தொடங்கிய போது, முதல் நாளே கைது செய்யப்பட்டார்,

உதயநிதி ஸ்டாலின்
ஆனால் இதை பற்றியெல்லம் துளியும் கவலைப்படாமல், இறுதி நாள் வரை களத்திலிருந்து மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தை முன்னெடுத்தார். அதேபோல சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டார். திமுக மிகவும் வலுவாக உள்ள தொகுதிகளில் ஒன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி என்பதால் மிக எளிதாக வெற்றிபெற்றார்.

களத்தில் உதயநிதி
பிரசாரத்தின் போதும் களத்தில் மிக ஆக்டிவாக இருந்தவர், தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆன பிறகும் அதேபோல தொடர்கிறார். தனது சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியை மாநிலத்திலேயே முன்மாதிரியான ஒரு தொகுதியாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். இதற்காகத் தினசரி தொகுதிக்கு விசிட் அடிப்பது, அப்பகுதி மக்களிடையே உரையாடுவது, குறைகளை கேட்டறிவது எனத் தொடர்ந்து களத்தில் இருக்கிறார்.

ராயப்பேட்டை மருத்துவமனை
இம்மாத தொடக்கத்தில் அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அங்குள்ள கழிவறை சுத்தமாக உள்ளதா என்பதை அவரே நேரில் சென்று ஆய்வு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதேபோல தனது தொகுதியில் உதயநிதி செய்த மற்றொரு சம்பவம் தான் ட்விட்டரில் இப்போது வைரலாக பரவி வருகிறது.

டாஸ்மாக் கடை
கடந்த சில தினங்களுக்கு முன் உதயநிதி வழக்கம் போலத் தனது தொகுதியில் ஆய்வை, மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்த பெண்கள் சேப்பாக்கம் வெங்கடேசன் தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் தாங்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாகவும் அந்தக் கடையை மூட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

சீல் வைத்த அதிகாரிகள்
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உதயநிதி, ஆலோசனை நடத்தினார். மேலும், இது பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜியுடனும் பேசியுள்ளார். தொகுதி மக்களின் நலனிற்காக அந்த குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் குறிப்பிட்டுள்ளார். அதன்படி மறுநாளே அந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மூடி, சீல் வைத்துள்ளனர்,

பாராட்டு
டாஸ்மாக் கடை மூடப்பட்டதை உறுதி செய்ய மீண்டும் சேப்பாக்கம் வெங்கடேசன் தெரு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் உதயநிதி. அப்போது அவரை சூழ்ந்து கொண்ட பெண்கள், கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த உதயநிதிக்கு நன்றி தெரிவித்தனர்.

மக்கள் எதிர்பார்ப்பு
மக்களின் கோரிக்கை தலைவர்கள் கேட்பது வாடிக்கை தான் என்றாலும் அதன் பிறகு ஆக்ஷன் இருக்காது. ஆனால், கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதைத் தொடர்ந்து உறுதி செய்து வருகிறார் உதயநிதி. வரும் காலங்களிலும் இப்படித் தொடர்ந்து களத்தில் மக்களுடன் உதயநிதி பயணிக்க வேண்டும் என்பதை அத்தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications