Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் பேச பேச.. நெகிழ்ந்து போய் மேடையிலேயே கண் கலங்கிய உதயநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக 75ஆம் ஆண்டு விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேசப் பேச, துணை முதல்வர் உதயநிதி உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். "தம்பி உதயநிதியின் கொள்கைப் பிடிப்பு மிக்க செயல்பாடுகளை பார்க்கும்போது, 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி' என்ற குறளுக்கேற்ப அவர் செயல்படுகிறார்" என ஸ்டாலின் பேசியதும், உணர்ச்சி மிகுதியில் உதயநிதி கண்ணீர்விட்டார்.

திமுக 75 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் திமுக இளைஞர் அணி சார்பாக 'அறிவுத் திருவிழா' சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 'காலத்தின் நிறம் கருப்பு, சிவப்பு' நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக் கொண்டார்.

Udhayanidhi Gets Emotional as CM Stalin Praises Him During DMK s 75th Anniversary Celebration

பின்னர் சிறப்புரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின், "திமுகவின் 75 ஆண்டுப் பயணத்தை நினைவுகூரும் இந்த விழாவிற்கு, "அறிவுத் திருவிழா" என்று உதயநிதி பெயர் வைத்திருக்கிறார். இதைவிடப் பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். கழகத்தைத் தொடங்கியது "அறி"ஞர் அண்ணா! ஐம்பதாண்டு காலம் அதைக் கட்டிக் காத்தவர் முத்தமிழ் "அறி"ஞர்! கழகத்தின் முதல் தலைமையகம் பெயர் "அறி"வகம்! தலைவர் கலைஞர் கட்டிய தற்போதைய தலைமையகத்தின் பெயர் "அறி"வாலயம்'! இவ்வாறு, அறிவை மையப்படுத்தி, அறிவொளியைப் பரப்புவதையே தலையாய கடமையாக நினைத்து இயங்கி வரும் கட்சியின் 75-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை, 'அறிவுத் திருவிழா' என்று சொல்லாமல், வேறு என்ன சொல்லி அழைக்க முடியும்?

உலகப் பொதுமறை வழங்கிய வள்ளுவருக்கான இந்தக் கோட்டத்தில், தலைவர் கலைஞர் விரும்பிய அறிவுத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ள, இளைஞர் அணிச் செயலாளர் 'கொள்கை இளவல்' தம்பி உதயநிதி அவர்களையும் - அவருக்குத் துணை நிற்கும் இளைஞரணி தம்பிமார்களையும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன்! தலைமைக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்!

கடந்த ஒரு மாத காலமாக, இந்த அறிவுத் திருவிழாவிற்கான பணிகளில் தம்பி உதயநிதி அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார் என்று முரசொலியில் செய்திகள் வந்துகொண்டே இருந்தது... நானும், "சரி, அப்படி என்னதான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள் என்று பார்ப்போம்" என்று காத்துக் கொண்டிருந்தேன்... எதையும் இடையில் கேட்கவில்லை. இப்போது இந்த அறிவுத் திருவிழாவைப் பார்த்த பிறகு சொல்கிறேன், "என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை என்று சொல்வதைவிட, நான் நினைத்ததைவிடச் சிறப்பாகவே ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்!". வள்ளுவர் கோட்டத்தில் நின்று சொல்கிறேன்... தம்பி உதயநிதியின் கொள்கைப் பிடிப்புமிக்க செயல்பாடுகளைப் பார்க்கிறபோது, அய்யன் வள்ளுவர் சொன்னாரே,

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்!"
என்ற குறளுக்கேற்ப தம்பி உதயநிதி செயல்படுகிறார் என்று பெருமையுடன் சொல்கிறேன். அந்தப் பெருமையோடு அவருக்கு ஒரு வேண்டுகோளும் வைக்க விரும்புகிறேன். ஏன் என்னுடைய அன்புக்கட்டளை என்று கூட சொல்லலாம். இந்த அறிவுத் திருவிழாவை இத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஆண்டுதோறும் நீங்கள் நடத்திட வேண்டும். நிச்சயம் இளைஞரணி இதைச் சிறப்பாக நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு.

முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு, 1967-இல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கழக வரலாற்றை, இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில், பல ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். "ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதலமைச்சர் நான்தான்" என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை. கழகத்தின் தலைவர்களில் இருந்து, கடைக்கோடித் தொண்டர் வரை, சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுகள் உயிரைக் கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தார்கள்! எத்தனை பத்திரிகைகள்! எத்தனை புத்தகங்கள்! எத்தனை கூட்டங்கள்! எத்தனை கொள்கை வகுப்பெடுக்கும் நாடகங்கள், திரைப்படங்கள்! எத்தனை போராட்டங்கள்! எத்தனை சிறைவாசங்கள்! எத்தனை தியாகங்கள்! எத்தனை துரோகங்கள்! தி.மு.க. உழைத்த உழைப்பு, சாதாரண உழைப்பல்ல!

சமூகத்தில் சரிபாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாமல் இருந்த காலத்தில், குக்கிராமத்தில் இருக்கும் முடிதிருத்தும் சலூன் கூட மக்களின் சிந்தனையைத் திருத்தும் மையமாக செயல்பட்டது. சைக்கிள் கடை, டீக்கடை என்று ஒரு இடம் விடாமல், திராவிட இயக்க இதழ்களை ஒரு தி.மு.க.காரர் வாசிக்க, அவரைச் சுற்றி பத்து பேர் செவி வழியாகக் கேட்டு உலக வரலாற்றைத் தெரிந்து கொண்டார்கள். கிராமத்தில் இருக்கிறவர்களும் கியூபா புரட்சியை தெரிந்து வைத்திருந்தார்கள். ரஷ்யப் புரட்சியைப் பற்றி படித்து, ஊக்கமும் உறுதியும் பெற்றார்கள். இவ்வாறு நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை!

இந்த வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள்! இன்னும் சில அறிவிலிகள் தி.மு.க.வைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். தி.மு.க.வைப் போன்று வெற்றி பெற, தி.மு.க.வைப் போன்று உழைப்பும், அறிவும் தேவை! ஒரு சூரியன்! ஒரு சந்திரன்! ஒரு தி.மு.க.தான்! இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது!

இந்த வரலாற்றையும் - நம்முடைய கொள்கைகளையும் - தம்பி உதயநிதி இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்ததால்தான், இளைஞரணிச் செயலாளராக அவர் பொறுப்பேற்றதில் இருந்து, லட்சக்கணக்கான இளைஞர்களை கழகத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்! அவர்களுக்குப் பாசறைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்! முரசொலியின் கடைசிப் பக்கத்தை பாசறைப் பக்கமாக மாற்றினார்! கொள்கைகளைப் பரப்ப முத்தமிழறிஞர் பதிப்பகத்தைத் தொடங்கினார்! தொகுதி தோறும் கலைஞர் நூலகங்களை திறக்கிறார்!
உங்களைப் போன்ற இளம் பேச்சாளர்களை உருவாக்குகிறார்! இப்போது, இந்த அறிவுத் திருவிழா மூலமாக, இளம் எழுத்தாளர்கள் - ஆராய்ச்சியாளர்கள் என்று உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்! இதுதான், தந்தை பெரியார் செய்த பணி! பேரறிஞர் அண்ணா செய்த பணி! தலைவர் கலைஞர் செய்த பணி! நான் விரும்பும் பணி! இதை உதயநிதி செய்வதால், தந்தை என்பதைவிட, இந்த இயக்கத்தின் முதன்மைத் தொண்டன் என்ற வகையில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!" எனப் பேசினார்.

மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேசப் பேச, துணை முதல்வர் உதயநிதி உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். "தம்பி உதயநிதியின் கொள்கைப் பிடிப்பு மிக்க செயல்பாடுகளை பார்க்கும்போது, 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி' என்ற குறளுக்கேற்ப அவர் செயல்படுகிறார்" என ஸ்டாலின் பேசியதும், உணர்ச்சி மிகுதியில் உதயநிதி ஸ்டாலின் கண் கலங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+