"10 டூ 3.." தமிழக அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்.. செந்தில் பாலாஜிக்கு எந்த இடம் தெரியுமா!
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 4 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட நிலையில், உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அமைச்சரவையில் உதயநிதிக்கு இப்போது 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு பிறகு 3வது இடத்தில் உதயநிதி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று கடந்த பல வாரங்களாகவே செய்திகள் உலா வந்து கொண்டு இருந்தன. இருப்பினும், சில காரணங்களால் அந்த அறிவிப்பு வராமலேயே இருந்தது.

உதயநிதி: குறிப்பாக உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டன. உதயநிதி அமைச்சராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பல திமுக தலைவர்களும் அமைச்சர்களும் வலியுறுத்தினர். இது குறித்து கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் முதல்வர் முடிவெடுப்பார் என்று மட்டும் சொல்வதை உதயநிதி வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
இது தொடர்பாக முதல்வரிடமே கூட பல முறை கேள்விகள் எழுப்பப்பட்டன. தொடக்கத்தில் இது குறித்து முதல்வர் தரப்பு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. கோரிக்கை வலுத்து இருக்கிறது.. ஆனால் பழுக்கவில்லை என்று ஒரு முறை சொல்லியிருந்தார். இருப்பினும், சமீபத்தில் கேட்ட போது "மாற்றம் இருக்கும்.. ஏமாற்றம் இருக்காது" என்று பதிலளித்தார். இதனால் விரைவில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
துணை முதல்வர்: இந்தச் சூழலில் தான் கடந்த சனிக்கிழமை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் செந்தில் பாலாஜி, நாசர் உட்பட 4 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட நிலையில், உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்கள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடந்தது.
3வது இடம்: இதற்கிடையே தற்போது தமிழக அமைச்சரவையில் உதயநிதிக்கு இப்போது 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதலில் உள்ள நிலையில், திமுக பொதுச் செயலரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 2வது இடம் தரப்பட்டுள்ளது.. அடுத்ததாக உதயநிதிக்கு 3வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அமைச்சரவையில் 10வது இடம் அளிக்கப்பட்டு இருந்தது. அதாவது மூத்த அமைச்சர்களின் பெயர்களுக்குப் பின்னர் உதயநிதி பெயர் 10வது இடத்தில் இருந்தது. இப்போது உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 3வது இடம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அமைச்சர்கள்: உதயநிதியைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரின் பெயர்கள் மாற்றமின்றி தொடர்கிறது. புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்ற சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு 27வது இடமும் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிறைவாசத்திற்குப் பின் மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு இதில் 21வது இடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல நாசருக்கு 29வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலம்: முன்னதாக கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் கடந்த 2009இல் ஸ்டாலின் மாநிலத்தின் முதல் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டு இருந்தார். அப்போது அரசு இணையப் பக்கத்தில் முதலில் கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின் பெயர் இருந்தது. அதன் பிறகே மூத்த அமைச்சரான க. அன்பழகன் பெயர் இருந்தது. இது கருணாநிதி கவனத்திற்குச் சென்ற நிலையில், க. அன்பழகன் 2வது இடத்திலும் ஸ்டாலின் 3வது இடத்திலும் வருவது போல மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications