உதயநிதி + மிதுன்.. விஜய்க்கு குழி பறிக்க ’கை’ கோர்த்த வாரிசுகள்! எடப்பாடி கையில் திமுகவின் லெட்டர்?
சென்னை: அதிமுகவும் திமுகவும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கப் போகின்றன என்ற தகவல் தமிழக அரசியலை பரபரக்க வைத்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று ஆளுநரை சந்திக்கவுள்ள நிலையில், திமுக ஆதரவு கடிதத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக - திமுக கூட்டணி ஆட்சி என்ற முடிவின் பின்னணியில் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும், எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் இணைந்தே இந்த முடிவுக்கு வந்திருப்பதாக சொல்கின்றனர் அதிமுகவினர்.
தமிழக அரசியல் களம் தற்போது எதிர்பாராத திருப்பங்களால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைப்பதற்கான போராட்டத்தில் சிக்கித் தவிக்கிறது.

ஒருபுறம் பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை எட்டுவதற்காக கூட்டணி ஆதரவை திரட்ட விஜய் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், மறுபுறம் திமுக - அதிமுக இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை உருவாக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலை பரபரப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம்
ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியம் என்ற சூழலில், தவெக தற்போது 108 இடங்களுடன் மிக அருகில் நின்றாலும், முழு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தபோதிலும், இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்காக விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
விஜய்
ஆனால், திமுக கூட்டணியில் இருக்கும் இந்த கட்சிகள் இதுவரை வெளிப்படையான முடிவை அறிவிக்காமல் இருப்பது விஜய் தரப்புக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தமிழக அரசியலை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், "திமுக வெளியில் இருந்து ஆதரவு அளித்து அதிமுக ஆட்சி அமைக்கலாம்" என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
திமுக
இந்த தகவலே தற்போது தமிழக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. திமுக இதை அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தாலும், அதிமுக தரப்பில் இருந்து இதுகுறித்து எந்தவித தெளிவான மறுப்பும் வெளியாகாதது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அரசியல் பார்வையாளர்களின் கணிப்புப்படி, விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழக அரசியலில் நிரந்தர மாற்றம் ஏற்படும் என்ற அச்சம் இரு திராவிட கட்சிகளிலும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எம்ஜிஆர்
குறிப்பாக, எம்ஜிஆர் போல விஜய் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டால், பின்னர் அவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்வது கடினமாகிவிடும் என்ற கவலை திமுகவின் இளம் தலைமுறையினரிடம் அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால்தான், "விஜயை எந்தவிதத்திலும் ஆட்சியில் அமர விடக்கூடாது" என்ற அடிப்படையில் புதிய அரசியல் கணக்குகள் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரக்கூடும் என்ற தகவலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தியதாகவும், திமுக ஆதரவு குறித்து அப்போது விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அரசியல் நகர்வுகளுக்கு பின்னால் டெல்லி அரசியலும் முக்கிய பங்கு வகிக்கிறது என கூறப்படுகிறது.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு அளித்திருப்பது பாஜக தலைமையை எச்சரிக்கை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜயின் வளர்ச்சி மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் வலுப்பெறக்கூடும் என்ற அச்சமும் பாஜக தரப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஆளுநர் உடனடியாக விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல், முழு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்தி வருவது அரசியல் ரீதியாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிமுகவில் பிளவு
இதற்கிடையில், "திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைந்தால், அதிமுகவில் பெரிய அளவில் பிளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது" என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். திமுகவை எதிர்த்து வளர்ந்த கட்சி அதிமுக. அந்தக் கட்சி திமுக ஆதரவுடன் ஆட்சி அமைப்பதை அடிப்படை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பை பயன்படுத்தி கட்சியை சிதைவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதிலேயே எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தனிப்பெரும் கட்சி
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் அமைதியாக இல்லை. "தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது" என்ற உணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அனுதாப அலை உருவாகும் என்ற நம்பிக்கையும் அக்கட்சியில் உள்ளது.
திமுக - அதிமுக இணைப்பு
தமிழக அரசியல் வரலாற்றிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக - அதிமுக இணைப்பு சாத்தியமா? அல்லது கடைசி நேரத்தில் விஜய் தேவையான ஆதரவை திரட்டி முதலமைச்சராக பதவியேற்பாரா? என்ற கேள்விகளுக்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே பதில் கிடைக்க உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் ஒவ்வொரு மணி நேரமும் புதிய திருப்பத்தை சந்தித்து வருகிறது.
உதயநிதி, மிதுன்
இந்த நிலையில் தான் இந்த திடீர் பரபரப்புக்கு காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. திமுக ஆட்சி பறிபோனதை விட தனது தந்தை தோற்றுப் போனதை உதயநிதி ஸ்டாலினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை அடுத்து திமுக அதிமுக கூட்டணி ஆட்சி என்ற பரபரப்பை அவர் தரப்பு கிளப்பி விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் உடன் அவர் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதிமுக திமுகவின் அடுத்த கட்ட வாரிசுகளாக பார்க்கப்படும் இருவரும் கைகோர்த்ததே தற்போது தமிழகத்தில் நிலவும் திடீர் பரபரப்புக்கு காரணம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications