உங்களுக்கே குறையா.. சசிகலாவை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்.. கருணாநிதி பாணியில் பஞ்ச்!
சென்னை: கிராமசபை கூட்டத்தில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அடித்த பஞ்ச் வசனத்தை கேட்டு பரபரத்துக் கிடக்கிறது கட்சி வட்டாரம்.
திமுக சார்பில் நடத்தப்படும் கிராம சபை கூட்டம் திருவள்ளூர் தெற்கு மாவட்டம், பூந்தமல்லி அடுத்த பானவேடு தோட்டம் ஊராட்சியில் மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், விபத்தில் காயம் அடைந்த திமுக வார்டு செயலாளர் சேகரின் மகன் அன்பு, மருத்துவ செலவுக்கு ரூ.10 ஆயிரம் அளித்தார்.
இதையடுத்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த கூட்டத்திற்கு நம்பிக்கையுடன் வந்துள்ளீர்கள். திமுகவிடம் சொன்னால் வேலை நடக்கும். மிக விரைவில் ஆட்சி மாற்றம் வரும். ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் உட்காருவார். இது பேசிவிட்டு செல்லக்கூடிய கூட்டம் அல்ல, உங்கள் குறைகளை சொல்லுவீர்கள் அதனை குறிப்பு எடுத்துக்கொண்டு தலைவரிடம் செல்வேன் என்றார்.
இதையடுத்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தங்களின் குறைகளை கூற தொடங்கினார்கள். இதில் முதலில் பேசிய பெண் தனது பெயரை சசிகலா என்று கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலின், "உங்களுக்கே குறையா" என்று சிரித்தபடி, தனது தாத்தா கருணாநிதி பாணியில், சூழலுக்கு ஏற்ப, பஞ்ச் அடித்தார். இதையடுத்து பொதுமக்கள் கூறிய குறைகள் ஒவ்வொன்றாக கேட்டறிந்தார். இதில் பாரிவாக்கம் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்டம், முதியோர் உதவி தொகை, ரேசன் கடையில் முறையாக பொருட்கள் வழங்கவில்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் இல்லை. தேர்தல் நடத்தாதுதான் இதற்கெல்லாம் காரணம். மோடி தமிழகத்திற்கு வருவதில்லை. திமுக ஆட்சியில் இந்த பூந்தமல்லி தொகுதிக்கு பல திட்டங்கள் கொண்டு வந்தோம்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம், மேம்பாலம் கட்டப்பட்டது. பூந்தமல்லியில் அரசு பொது மருத்துவமனை, 200 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 300 பேருக்கு கொடுக்கப்படும், நீங்கள் எல்லோரும் உதயசூரியனுக்கு வாக்கு அளிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபின் முழுவதும் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.