“இது எப்டி இருக்கு?”.. சனாதனிகள் போராட்டம்.. “இந்தி தெரியாது போடா”.. ‘நச்’ பதிலடி கொடுத்த உதயநிதி!
சென்னை: பாஜகவினர் மற்றும் இந்துத்வ அமைப்பினர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு வட மாநிலங்களிலும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், உதயநிதிக்கு எதிராக இந்தியில் கோஷம் போட்டு போராட்டம் நடத்தும் வீடியோவை உதயநிதியை மென்ஷன் செய்து ஒருவர் பதிவிட, "இந்தி தெரியாது போடா" என "நறுக்" ரிப்ளை செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது "இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது.

கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது" எனப் பேசி இருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிராக பாஜகவினர் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் உதயநிதியின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உ.பி மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா என்பவர் அமைச்சர் உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி என அறிவித்து மிரட்டல் விடுத்தார். மேலும், தயநிதி ஸ்டாலினின் படத்தை கத்தியால் குத்தியும், தீவைத்து எரித்தும் ஆச்சார்யா சாமியார் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சனாதன ஆதரவாளர்கள், இந்துத்வ அமைப்பினர் ஒன்று திரண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது உதயநிதி படத்தை முகமூடியாக அணிந்த நபர் ஒருவருக்கு கைவிலங்கு இடப்பட்டு பின்னர் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மையை தயார் செய்து அதை கழுவேற்றுவது போல கம்பு ஒன்றில் அவரது உருவ பொம்மையை குத்தி இழுத்துச் சென்றனர்.
Hindi theriyathu Poda 😂
— Udhay (@Udhaystalin) September 5, 2023
இந்நிலையில், ஹசாரிபாக்கில் இந்துத்வ ஆதரவாளர்கள் உதயநிதிக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்திய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, "இது எப்படி இருக்கு?" என்கிற ரீதியில் நக்கலாக பாஜக ஆதரவாளர் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், "இந்தி தெரியாது போடா" என ரிப்ளை கொடுத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிலைக் குறிப்பிட்டு நெட்டிசன்களும், திமுகவினரும் கொண்டாடி வருகின்றனர். உதயநிதி தலையை சீவினால் ரூ.10 கோடி அறிவித்த சாமியாருக்கு, "10 ரூபாய் சீப்பு இருந்தால் நானே என் தலையை சீவிக்கொள்வேன்" என அதகளமான பதிலடி கொடுத்த உதயநிதி, இப்போது வட மாநில பாஜக ஆதரவாளருக்கு 'இந்தி தெரியாது போடா' என ரிப்ளை செய்துள்ளதை திமுகவினர் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications