செத்த மொழி சமஸ்கிருதம்.. சென்னை விழாவில் உதயநிதி கடும் விமர்சனம்.. விவாதத்தை கிளப்பிய பேச்சு
சென்னை: ‛‛பிரதமர் மோடி தன்னால் தமிழ் படிக்க முடியாமல் போய்விட்டது என்று ரொம்ப பீல் செய்து பேசி உள்ளார். அதேவேளையில் தமிழ் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி வெறும் ரூ.150 கோடி. ஆனால் செத்த மொழி சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 10 ஆண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.2,400 கோடி. இதுதான் பிரதமர் மோடியின் தமிழ் பாச நாடகம்'' என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சென்னையில் நேற்று புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பிரதமர் மோடி தமிழ் மொழி மீது போலியான பாச நாடகத்தை போடுவதாக குற்றம்சாட்டினார். அதுமட்டுமின்றி சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று கூறியது விவாதத்தை கிளப்பி உள்ளது.

இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ‛‛பிரதமர் மோடி அவரால் தமிழ் படிக்க முடியாமல் போய்விட்டது என்று ரொம்ப பீல் செய்து பேசி உள்ளார். ஒரு பக்கம் தமிழ் மீது அக்கறை இருப்பது போல் இருக்கும் நீங்கள் (பிரதமர் மோடி) இன்னொரு பக்கம் நம் பிள்ளைகள் தமிழ் படிக்க கூடாது என்று ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்கிறீர்களே?. இது எந்த வகையில் நியாயம்?.
தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கான நிதி பகிர்வு ரூ.2,500 கோடியை தருவதாக சொன்னீர்களே? இது எந்த விதத்தில் நியாயம்?. தமிழ் படிக்காமல் போய்விட்டேன் என்று கவலைப்படும் நீங்கள் (பிரதமர் மோடி) தமிழின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்துள்ளீர்கள்?
தமிழ் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி வெறும் ரூ.150 கோடி தான். ஆனால் செத்த மொழி சமஸ்கிருத வளர்ச்சிக்கு 10 ஆண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.2,400 கோடி. தமிழ் வளர்ச்சிக்கு ரூ.150 கோடி. சமஸ்கிருதத்த வளர்ச்சிக்கு ரூ.2,400 கோடி. இதுதான் பிரதமர் மோடியின் தமிழ் பாச நாடகம்.
இந்த அநியாயத்தை தட்டி கேட்க வேண்டும். இதற்கு நம் கையில் கிடைத்து இருக்கும் வாய்ப்பு தான் 2026 சட்டசபை தேர்தல். அந்ததேர்தலில் முதல்வர் ஸ்டாலின் வெற்றிபெற செய்து தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக்க வேண்டும்'' என்று பேசினார். சமஸ்கிருதத்தை செத்தமொழி என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் இந்தபேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‛‛எந்த மொழியையும் செத்துபோய் விட்டது என்று கூற யாருக்கும் உரிமை கிடையாது. குறிப்பாக நாடு முழுவதும் பிரார்த்தனை மற்றும் சடங்குகளில் பயன்படுத்தப்படும் மொழியை இப்படி கூற யாருக்கும் உரிமை கிடையாது.
ஒவ்வொரு தலைவர்களும் மொழி மற்றும் கலாசாரம் பற்றி பேசும்போது அதிக கவனமுடன் இருக்க வேண்டும். தமிழ் மொழி காலப்போக்கில் பல சமஸ்கிருத சொல்லை இணைத்து கொண்டுள்ளது. இது வலிமை மற்றும் வெளிப்படைத்தன்மையை காட்டுகிறது. பலவீனத்தை அல்ல'' என்று கூறி உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications