திமுக இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகள்! மதுரையில் உதயநிதி நடத்திய இன்டர்வியூ! ஆர்வமுடன் டொனேஷன்!
திமுக இளைஞரணிக்கு புதிய படையை களமிறக்கும் உதயநிதி.
மதுரை: திமுக இளைஞரணியில் தமிழ்நாடு முழுவதும் புது முகங்களை களமிறக்கும் திட்டத்தில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடத்தி முடித்திருக்கிறார்.
அப்போது அந்த நேர்காணலில் பங்கேற்க வந்த இளைஞர்கள் பலரும் திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் விதமாக 5,000 ரூபாய், 10,000 ரூபாய், 25,000 ரூபாய் என தங்கள் சக்திக்கேற்ப காசோலையை கொண்டு வந்து உதயநிதியிடம் கொடுத்தனர்.
சென்னை, மதுரை என இரண்டு மண்டலங்களில் நேர்காணல் நடத்தி முடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், திருச்சி, கோவை, சேலம் வேலூர் என அடுத்தடுத்த மண்டலங்களிலும் நேர்காணல் நடத்தவுள்ளார்.

திமுக இளைஞரணி
திமுகவில் உள்ள மற்ற அணிகளை காட்டிலும் இளைஞரணியில் பதவிகளை வாங்குவதற்கு அக்கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கு காரணம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நேரடி நிர்வாகத்தின் கீழ் அந்த அணி இயங்குவதே ஆகும். இதனால் தான் திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் எப்பாடு பட்டாவது தங்கள் வாரிசுகளை இளைஞரணியில் புகுத்தி விட வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார்கள்.

பரபரப்பாக நேர்காணல்
இதனிடையே திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளர், மாநகர அமைப்பாளர் பதவியிடங்களுக்கு விருப்பமனு கொடுத்தவர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்த ஆரம்பித்துவிட்டார். கடந்த மாதம் 24ஆம் தேதி சென்னையில் நேர்காணல் நடத்திய அவர் நேற்று முன் தினம் 6ஆம் தேதி மதுரை நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து இண்டர்வியூ நடத்தினார். அதில் தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து திரளான இளைஞர்கள் பங்கேற்றனர்.

வழக்கம் போல்
சென்னையில் கேட்டதை போலவே கட்சியில் எப்போதிருந்து உறுப்பினர், என்ன வேலை செய்கிறீர்கள், என்ன படித்திருக்கிறீர்கள், வருமான ஆதாரம் என்ன?,குடும்பத்தில் யாராவது பொறுப்பில் இருக்கிறார்களா என்பன உள்ளிட்ட பல கேள்விகளை வழக்கம் போல் எழுப்பியிருக்கிறார் உதயநிதி. நாம் ஏற்கனவே கூறியதை போல், திமுக இளைஞரணியில் புது முகங்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள உதயநிதி ஸ்டாலின் அந்த விவகாரத்தில் மட்டும் சமரசமின்றி செயல்பட்டு வருகிறார்.

துணைச் செயலாளர்கள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்களான ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு , சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார், ஜோயல் உள்ளிட்டோர் இந்த நேர்காணலின் போது உடனிருந்தனர். இதனிடையே ஜோயல் தலைமையிலான தனி டீம் நேர்காணலுக்கு வந்திருந்தவர்களின் வயதை சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டது.












Click it and Unblock the Notifications