வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி!
சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி சென்ற விஜய் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். வாயில் இருந்து நல்லா வருது.. வேண்டாம் என்று விஜய் பேசியிருந்தார். இதற்கு உதயநிதி, வாயில் இருந்து நல்லா வருமா.. என்ன வரும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "சிஎம் சார் நன்றி சொல்வதற்காக திருச்சி கிழக்கு சென்றுள்ளார். பெரம்பூரில் வெற்றி பெற்றுள்ளார். பெரம்பூரில் நன்றி சொல்ல வக்கில்லை. சட்டமன்றத்தில் நான் திருச்சி சென்று நன்றி தெரிவிக்க சொன்னதால் தான் திருச்சி சென்றார்.

கவர்ச்சி இல்லாமல் வேறு என்ன
திருச்சி போனாரே நன்றி சொன்னாரே. முதல்வரான பிறகு கடந்த 5 வருடங்களில் நம் தலைவர் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் புதிய திட்டங்களை அறிவித்தார். இப்போதைய சிஎம் திருச்சியில் ஏதாவது திட்டத்தை அறிவித்தாரா. ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. திருச்சி கிழக்கில் இன்னும் 6 மாதங்களில் இடைத்தேர்தல் வரப்போகிறது. அதற்கான பிரச்சாரத்திற்கு சென்றுள்ளார். அவர் எப்போது வாயை திறந்தாலும் எல்லாத்துக்கும் காரணம் திமுக என்று சொல்கிறார்.
திருச்சியில் அவர் பேசியதை கேட்டு மக்கள் தலையில் அடித்துக் கொள்கிறார். இவரையெல்லாம் முதலமைச்சராக தேர்வு செய்துள்ளோமே என்று தலையில் அடித்துக் கொள்கிறார். இதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. கவர்ச்சியில் தான் மக்கள் என்னை தேர்வு செய்துள்ளார்களா என்று சிஎம் சார் கோபப்படுகிறார். கவர்ச்சியில் வெற்றி பெறாமல் எதில் வெற்றி பெற்றார் என்று 2 காரணங்களை அவரை சொல்ல சொல்லுங்கள்.
வாயில் என்ன வரும்
கலைஞரை போல இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதானாரா அல்லது ஸ்டாலினை போல மிசாவில் கைதானாரா. கட்சி ஆரம்பித்தே 2 வருடங்கள் தான் ஆகிறது. மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளீர்களா. பாஜகவுக்கு எதிராக ஏதாவது போராட்டம் நடத்தினார்களா. தமிழகம் முழுவதும் சென்று மக்களிடம் ஓட்டு கேட்டிர்களா. உங்கள் வேட்பாளர்களின் பெயராவது தெரியுமா. எதுவுமே தெரியாது. இதைத்தான் எங்கள் தலைவர் கவர்ச்சி அரசியல் என்கிறார்.
வாயில் இருந்து நல்லா வந்துவிடும் என்று சொல்கிறார். வாயில் என்ன வரும். தமிழ்நாட்டு மக்கள் வாயில் நிறைய வரும். முதலமைச்சர் வாயில் ஏதாவது நல்ல திட்டம் வருமா என்று மக்கள் காத்திருக்கிறார்கள். இதுவரை உருப்படியாக எதுவும் வரவில்லை. எதை கேட்டாலும் திமுக சதி. திமுக தவெக என்கிறார். தூர சக்தி, கோர சக்தி, பார சக்தி என டி.ராஜேந்திரன் போல ரைமிங்காக பேசுகிறார். எவ்வளவு பெரிய தோல்வியாக இருந்தாலும் மீண்டு வருவோம். அதற்காக மக்களிடம் தூரமாக இருந்ததில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications