2019ல் 'செங்கல்’.. இன்று தெற்கில் ஆட்டத்தை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்.. சூறாவளி பிரச்சார அட்டவணை!
சென்னை: திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் நேற்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போதுதான் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். எய்ம்ஸ் செங்கலை கையில் எடுத்து உதயநிதி மேற்கொண்ட பிரச்சாரம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து தேர்தலுக்குப் பிறகு திமுக இளைஞரணி செயலாளர் ஆக்கப்பட்டார் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு 2021ல் உதயநிதிக்கு சீட் கொடுக்கப்பட்டு, அதில் அவர் வென்று பின்னர் அமைச்சரும் ஆனார்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்க உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் "இந்தியா கூட்டணி" வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார். உதயநிதி ஸ்டாலினின் பிரச்சார பயணத்திட்டம் குறித்த அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.

இன்று சனிக்கிழமை மார்ச் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு இராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகே உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடங்குகின்றார். மேலும் மாலை 6 மணிக்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலும், இரவு 7.15 மணிக்கு விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் பகுதியிலும், இரவு 8.30 மணிக்கு தேனி உசிலம்பட்டி பகுதியிலும், இரவு 9.15 மணிக்கு தேனியின் ஆண்டிப்பட்டி பகுதியிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

மேலும் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தேனி மாவட்டம் வடக்கு பகுதியிலும், காலை 11 மணிக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளிளும், மாலை 5 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு பகுதியிலும், மாலை 6:15 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் பகுதியிலும், இரவு 7 மணிக்கு மதுரை வடக்கு பகுதியிலும், இரவு 7.45 மணிக்கு மதுரை மாநகரிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதேபோல் வரும் 25ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் தெற்கு பகுதியிலும், மாலை 6 மணிக்கு செய்யாறு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணியிலும், இரவு 7 மணிக்கு வந்தவாசி திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணியிலும், இரவு 8 மணிக்கு சேத்துப்பட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணியிலும், இரவு 9 மணிக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு திருவண்ணாமலையில் துவங்கி இரவு 9:30 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் தனது பிரச்சாரத்தை முடிக்கும் அவர் அன்றைய நாளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். மார்ச் 27 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு அரக்கோணம் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் அவர் மாலை 7:30 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் தனது பிரச்சாரத்தை முடிக்கிறார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், "மக்களவைத் தேர்தலையொட்டி, INDIA கூட்டணிக்கான பிரச்சாரத்தை கழகத்தலைவர் - முதலமைச்சர் ஸ்டாலின், திருப்புமுனை தரும் திருச்சியில் தொடங்கி இருக்கிறார். தமிழ்நாட்டின் மையத்தில் இருந்து கிளம்பியிருக்கும் "நம் தலைவர் அவர்களின் குரலை" எட்டுத்திக்கும் எடுத்துச் செல்ல, எனது முதற்கட்டத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருச்சுழியில் நாளை தொடங்கவிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு மாதம், வீசும் காற்றில் கூட பாசிசத்துக்கு எதிரான போர்க்குரல் கலந்திருக்கட்டும். மாநில உரிமைகளை மீட்போம் - இந்தியாவை காப்போம்!" எனத் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் அடுத்தகட்ட பிரச்சார பயண அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications