விடிய விடிய கொட்டிய மழை! சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் தாமதம் ஏன்? உதயநிதி விளக்கம்
சென்னை: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் கனமழை பெய்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர்கள் நனைந்தபடியே வீட்டிற்கு வந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் தீவிரமடைந்துள்ளது. இத்தனை நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது.

அது போல் வெயிலும் மாறி மாறி இருந்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையும் கனமழை பெய்தது. இந்த நிலையில் நேற்றே சென்னைக்கு கனமழை என எச்சரித்தும் பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் மேலும் மழை தீவிரமடைந்ததை அடுத்து காலை சுமார் 7.15 மணிக்கு சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னையில் பெரும்பாலான பள்ளிகள் காலை 7.30 மணிக்கே தொடங்கிவிடும் நிலையில் குழந்தைகள் காலையிலேயே பள்ளிக்குச் சென்றனர். இந்த நிலையில் லீவு அறிவித்ததால் மழையில் நனைந்தபடியே அவர்கள் திரும்பி வந்தனர்.
இதனால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். மழை பெய்தால் தாமதமாக விடுமுறை அறிவிக்கும் போது இது போல் நேர்கிறது என்றனர். மேலும் விடுமுறை விடுவதே மாணவர்கள் நலனுக்காகத்தான். அப்படியிருக்கும் போது தாமதமாக விடுமுறை அறிவிப்பதால் அவர்கள் மழையில் நனைந்தபடியே வந்ததாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.
மேலும் முன்கூட்டியே விடுமுறையை அறிவிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர். இந்த நிலையில் சென்னை தரமணியில் ஒரு விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மழைக்கான விடுமுறை தாமதமாக அறிவிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு உதயநிதி கூறுகையில் சென்னையில் கனமழை பெய்யும் என நேற்று முதலே சொன்ன நிலையில் மழையே வரவில்லை. நள்ளிரவு 2 மணிக்கு மேல்தான் மழை பெய்யத் தொடங்கியது. இதனால்தான் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க முடியாமல் போனது.
இனி வரும் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் தாமதம் ஏற்படாது. நள்ளிரவுக்கு பிறகே மழை தீவிரமடைந்ததால் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது என உதயநிதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அது போல் சென்னை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த அவசர கால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், சென்னையில் நேற்றிரவு தொடங்கி மழை பெய்தாலும் எந்தப் பகுதியிலும் பெரிதாக மழைநீர் தேங்கவில்லை. இனிமேல் கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
சராசரியாக சென்னையில் 3.60 செ.மீ., தென் சென்னையில் சராசரி 5.5 செ.மீ, பெருங்குடியில் 7.35 செ.மீ., மழை பெய்திருக்கிறது. அதேபோல, செங்கல்பட்டில் 1.06 செ,மீ., திருவள்ளூரில் 0.6 செ,மீ., காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ., உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்திருக்கின்றது.












Click it and Unblock the Notifications