“உதய் அண்ணா வேற லெவல்” - சிஎஸ்கே மேட்ச் பார்த்து மகிழ்ந்த 250 ஏழை குழந்தைகள்!
சென்னை: இந்த ஆண்டு கோடை விடுமுறையை தரமாகக் கொண்டாடி இருக்கிறார்கள் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பிள்ளைகள். அதற்குக் காரணம் உதயநிதி ஸ்டாலின். தனது தொகுதியில் உள்ள 250 குழந்தைகளை சிஎஸ்கே மேட்ச் பார்க்க அழைத்துக் கொண்டு போய் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேட்சை நேரில் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது என குழந்தைகளிடம் கேட்டோம்.
நான்காம் வகுப்பு படிக்கும் தேஜஸ்வி, "நான் இதுவரைக்கும் டிவியில்தான் மேட்ச் பார்த்திருக்கிறேன். ஸ்டேடியம் போய் பார்த்ததே இல்லை. அந்த ஸ்டேடியம் உள்ளே கூட போனதில்லை. ஃபர்ஸ்ட் டைம் இப்போதுதான் ஸ்டேடியம் உள்ளே போனேன். எவ்வளவு பெரிய கிரவுண்ட். பார்க்கவே சந்தோஷமா இருந்தது" என்றார்.

அடுத்து ஜீவரேகா. இவரது அப்பா டிரைவர். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். அவர், "சேப்பாக்கம் ஸ்டேடியம் பக்கம் தான் வீடு. பிறந்து வளர்ந்ததிலிருந்து இங்கே உள்ள குடிசைப் பகுதியில் வசிக்கிறேன். எத்தனையோ முறை மேட்ச் நடக்கும் போது அப்பாவுடன் இந்த ஸ்டேடியம் பக்கமா நடந்து போய் இருக்கிறேன்.
ஆனால் ஒருமுறை கூட உள்ளே சென்றதில்லை. உள்ளே போக ஆசையாக இருக்கும். டிக்கெட் விலை ஆயிரக்கணக்கில் இருப்பதால் அது எங்களுக்கு ஒரு கனவாகவே இருந்தது. பல வருஷக் கனவு இப்போது உதய் அண்ணா மூலம் நிறைவேறி இருக்கிறது.
ஸ்டேடியம் உள்ளே போய் எல்லோரையும் போல உட்கார்ந்து நேரடியாக மேட்ச் பார்த்தோம். செம சூப்பர். நல்லா என்ஜாய் பண்ணோம். வாழ்க்கையில் மறக்கவே முடியாத விஷயம்" என்றார்.

இவரது தாயார் கூறும்போது, "சம்பாதிக்கின்ற பணத்தில தினம் குடும்பம் நடத்தவே சரியா இருக்கிறது. குழந்தைகளைக் கூட்டிப் போய் கிரிக்கெட் மேட்ச் பார்க்க வைக்கின்ற அளவுக்கு வசதி இல்லை. ஆனால், இன்றைக்கு எங்கள் பிள்ளைகளும் மேட்ச் பார்த்துவிட்டு வந்து பேசுவதைக் கேட்கும் போது மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "உதயநிதி எம்.எல்.ஏ. ஆபீசுக்கு வரச் சொன்னார்கள். போய் எங்கள் பிள்ளைகள் பெயரைக் கொடுத்தோம். அவர்களுக்கு ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் இருக்கா என்று பார்த்தார்கள். உண்மையில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதால் அழைத்துக் கொண்டு போனார்கள்" என்றார்.
"எங்களுக்கு எல்லாம் டிஷர்ட் கொடுத்தார்கள். எல்லோருக்கும் ஒரே கலர் டி ஷர்ட் தான். எங்களை அழைத்துப் போக வேன் வந்தது. அங்கு போனதும் உதய் அண்ணா வந்தார். எங்களிடம் பேசினார். நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவர் வந்தது பெரிய சர்ப்ரைஸ்.

அப்புறம் எங்களோடு சேர்ந்து உட்கார்ந்து குரூப் போட்டோ எல்லாம் எடுத்தார். அவரே செல்ஃபியும் எடுத்துக் கொடுத்தார். இந்த சம்மர் ஹாலிடே நல்லா என்ஜாய் பண்ணி இருக்கிறோம். அதற்காக உதய் அண்ணாவுக்குப் பெரிய பெரிய தாங்க்ஸ்" என்கிறார் இந்த செல்ஃபி புள்ள கனிமொழி
"நல்லா ஹேப்பியா இருந்தோம். அம்மா, அப்பா கூட இதுவரை எங்களை அழைத்து போனதில்லை. ஆனால், உதய் அண்ணா அழைத்துப் போய் மேட்ச் பார்க்க வைத்திருக்கிறார். நாங்களும் மேட்ச் பார்க்கப் போவோம் என்று சத்தியமா கனவில் கூட நினைக்கவே இல்லை" என்கிறார் அஷ்வினி.
பெண் பிள்ளைகள் அனைவருக்கும் கருப்பு டி ஷர்ட் கொடுத்திருந்தார்கள். அதேபோல் ஆண் பிள்ளைகள் அனைவருக்கும் சிஎஸ்கேவின் நிறமான மஞ்சள் டி ஷர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
அத்தனை பேருக்கும் ஸ்நாக்ஸ், குளிர் பானம் என பல உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. ஆகவே, கொஞ்சமும் சோர்வு இல்லாமல் இந்தத் தொகுதிக் குழந்தைகள் மேட்ச் பார்த்தார்கள்.
மேட்ச் பார்க்க வந்திருந்த அனைவரும், "உதய் அண்ணா வேற லெவல்" என்று கோஷம் போட்டு அரங்கத்தை அதிர விட்டார்கள்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், " #Chepaukstadium-ல் ஒரு கிரிக்கெட் போட்டியையாவது காண வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் ஆசைகளில் ஒன்று. நம் #ChepaukTriplicane தொகுதியில் வசிப்போருக்கு அது உணர்வுப்பூர்வமான கனவு.
எனவே, வட்டம் 120ஐ சேர்ந்த கிரிக்கெட் ஆர்வமுள்ள 100 சிறுவர்-சிறுமியருக்கு டிக்கெட் வாங்கித்தந்து @ChennaiIPL Vs @KKRiders IPL போட்டியை இன்று காணச் செய்தோம். சிறுவர்களின் மகிழ்ச்சியும் உற்சாகமும் என்றும் தொடரட்டும்" எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதேபோல் மற்றொரு ட்வீட்டில் "கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமும் - திறமையும் கொண்ட #ChepaukTriplicane தொகுதி சிறுவர் - சிறுமியரை நேரில் IPL கிரிக்கெட் போட்டிகளைக் காணச்செய்யும் விதமாக, வட்டம் 119-ஐ சேர்ந்த 150 பேருக்கு டிக்கெட் வாங்கித்தந்து அவர்களுடன் அமர்ந்து @ChennaiIPL Vs @DelhiCapitals போட்டியை #Chepaukstadium-ல் இன்று கண்டு மகிழ்ந்தோம். இப்போட்டியை உற்சாகத்துடன் ரசித்த சிறுவர்களுக்கு வாழ்த்துகள்" என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தங்கத் தமிழ்ச் செல்வனும் தனது பெரியகுளம் வட்டாரத்திலிருந்து சிஎஸ்கே மேட்ச் பார்க்க மாற்றுத்திறனாளிகளை அழைத்துக் கொண்டுவந்தார். அவரிடம் பேசினோம். "எல்லோரும் வசதி இல்லாத குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள். விளையாட்டு ஆர்வலர்கள். அவர்களின் கனவு மேட்ச் பார்க்கவேண்டும் என்பது.
குறிப்பாகச் சொன்னால், மாற்றுத்திறனாளி கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் என மொத்தம் 20 வீரர்களைச் சென்னைக்கு அழைத்து வந்து போட்டியைப் பார்க்க வைத்தோம்.
நானும் இதுவரை மேட்ச் பார்த்ததில்லை. நேரடியாகப் பார்ப்பது இதுவே முதன்முறை. அதுவும் இந்த மாற்றுத்திறனாளிகளுக்காக வந்ததில் மகிழ்ச்சி" என்றார்.












Click it and Unblock the Notifications