இன்னும் அதிக பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் அடுத்த சிக்சர்! உதயநிதி சொன்ன தேதி!
சென்னை: திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உலகமே வியந்து பாராட்டி வருகிறது, நமது தமிழ்நாட்டை நம்முடைய முதல்வர் பார்த்துகொள்வார் எனவும், இன்னும் 3 மாதங்களில் அதிகமான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மங்கல நாண் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, மணமக்களை வாழ்த்தினார்.
இணைகளுக்கு 4 கிராம் பொன் தாலி மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இவ்விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்," தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சார்பாக 30 இணையர்களுக்கு திருமணத்தை உங்களுடைய முன்னிலையில் நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் பெருமை அடைகிறேன். மற்ற நிகழ்ச்சிகளை விட திருமண நிகழ்ச்சியில் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கும். எங்கே நடத்தினாலும் அமைச்சர் சேகர் பாபு நடத்துகிற நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும்.
மிக மிக முக்கியமான நாள் இன்னைக்கு காதலர் தினம். காதலர் தினத்தை சிலர் கொண்டாட கூடாது என்பார்கள். காதலர் தினத்தை கொண்டாடாம இருக்க முடியுமா? இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு இணையர்களும் நல்ல காதலர்களாக நண்பர்களாக இருக்க வேண்டும். 1 லட்சத்து 80 ஆயிரம் கோயில் நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்டு உள்ளது. இதுவரை 2022 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 1800 திருமணங்கள் நடத்தப்பட்டு உள்ளது.
இன்னும் 700 திருமணங்களை நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள மணமகள் பலர் பட்டதரிகளாக உள்ளனர் என்பது திராவிட மாடலின் பெருமை. ஒட்டுமொத்த தமிழ்நாடும் கல்வியில் சிறந்து காணப்படுகிறது. உயர்கல்வியில் இந்தியாவில் 47 சதவீதம் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வீடு நன்றாக இருந்ததால் தான் நாடு நன்றாக இருக்கும் என்ற அறிஞர் அண்ணாவின் கூற்று படி மணமக்கள் வீட்டை நன்றாக கவனியுங்கள்.நாட்டை காக்க முதல்வர் பார்த்துக்கொள்வார்

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உலகமே வியந்து பாராட்டி வருகிறது. இங்கு இருக்கும் மணமக்கள் தங்களது இல்லத்தை பார்த்து கொள்ள வேண்டும் நாட்டை நம்முடைய முதல்வர் பார்த்து கொள்வார். பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச பேருந்து பயணத் திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் குறைந்தபட்சம் 900 ரூபாயை சேமிக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக சிறப்பான ஒரு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார் அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் சென்று கொண்டிருக்கிறது. மேலும் முதலமைச்சரின் அறிவுரையை பெற்று இன்னும் மூன்று மாதங்களில் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications