விஜய் ஆட்சி புதுமையான ஆட்சியில்லை.. புஷ்பா பட ஆட்சி.. விஜய் மீது உதயநிதி கடும் விமர்சனம்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தவெக 13ம் தேதிக்குள் (இன்று) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உத்தரவிட்டார். அதன்படி தவெக ஆட்சியை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில், உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விஜயை விமர்சனம் செய்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது.

மேலும் அதிமுகவில் வேலுமணி அணி மற்றும் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். ஆளுநரின் உத்தரவுப்படி தவெக ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், புதிய ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. கடந்த 10 நாட்களாக இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதை விமர்சனமாக வைக்கிறோம்.
தவெக ஆட்சியமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 1.72 கோடி வாக்காளர்களும், 3.23 கோடி வாக்காளர்கள் உங்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி இது. 118 உறுப்பினர்கள் கொண்ட ஒரு கூட்டணியால் தான் ஆட்சி செய்ய முடியும். தவெகவுக்கு 108 இடங்கள் தான் இருக்கும். தவெக தலைவர் தன் வெற்றி குறித்து நம்பிக்கையில்லாத காரணத்தால் 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
இன்னும் அந்த தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. தவெகவுக்கு இப்போது 106 எம்எல்ஏக்கள் ஆதரவு தான் உள்ளது. திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சியமைத்துள்ளது. பெரும்பான்மைக்கு எண்ணிக்கை இயலாதது. கூவத்தூரை மிஞ்சுமளவுக்கு கூத்தடிக்கிறார்கள். இந்த ஆட்சி எவ்வளவு நாட்கள் நீடிக்க போகிறது என்று தெரியவில்லை. எம்எல்ஏக்களை கடன் வாங்கி ஆட்சி செய்யும் இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications