வீட்டுக்கு போன புதிய சோஃபா! பின்னாடியே போன விஜய்! புஷ்பா பட பாணி- உதயநிதி அட்டாக்
சென்னை: அதிமுக பிளவுப்பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினரின் வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. அதன் பின்னாலேயே புதிய முதல்வரான விஜய்யும் செல்கிறார், தவெக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தனர்.
முதல்வர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "புதிதாக அமைந்த ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. அதற்கு முன்பு வாக்கெடுப்பு தொடங்கி 10 நாட்களாக ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்தது என்பதை நான் எதிர்க்கட்சியாக கருத்துகளை முன்வைக்கிறேன்.

தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்குகள் 4 கோடியே 93 லட்சத்து 25 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். அதில் தவெகவுக்கு 1 கோடியே 72 லட்சத்து 26 ஆயிரம் பேர்தான் வாக்களித்துள்ளனர். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் அரசுக்கு எதிராக 3 கோடியே 21 லட்சம் பேர் வாக்களித்தனர்.
இதன் மூலம் தவெகவுக்கு 65 சதவீதம் பேர் நிராகரித்துள்ளனர். உங்கள் மீது உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே நம்பிக்கை குறைந்துவிட்டது.
தமிழகத்தில் சட்டசபையின் பலம் 234 ஆகும். இதில் பெரும்பான்மைக்கு 118 ஆகும். இந்த எண்ணை எந்த கட்சியோ அல்லது கூட்டணியோ தொடுகிறதோ அந்த கட்சிதான் ஆட்சிக்கு வர முடியும். ஆனால் தவெகவுக்கு 108 இடங்கள்தான் இருக்கு.
108 இடங்களை பெற்ற தவெக தலைவர் விஜய், இதுவரை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. அதில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்ததால் 107 இடங்களானது. மேலும் திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ வாக்களிக்க முடியாததால் தற்போது இந்த அரசுக்கு 106 இடங்கள் மட்டுமே இருக்கிறது.
எனவே திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை சேர்த்து பெரும்பான்மை இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்து தவெக ஆட்சி அமைந்துள்ளது. கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல், விசிக தலைவர்கள் இந்த ஆட்சிக்கு ஏன் ஆதரவு கொடுத்தார்கள் என்பதற்கு சொன்ன காரணம் , குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறக் கூடாது என்பதற்காக அவர்கள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்வோம் என தெரிவித்துள்ளனர்.
மதசார்பற்ற கட்சி என சொல்லிக் கொள்ளும் தவெக, கொள்கை எதிரி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அந்த கட்சித் தலைவருக்கே தெரியாமல் அவரது உறுப்பினரை தங்கம் பக்கம் இழுத்துவிட்டனர்.
தவெகவுக்கு ஆதரவு கொடுத்த கூட்டணி கட்சிகளுக்கும் விரைவில் நம்பிக்கை குறையும். திமுகவின் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த மாதம் 15 ஆம் தேதி உரிமைத் தொகைக்காக மகளிர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 7ஆம் தேதியே வரவு வைக்கப்பட வேண்டிய புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்திற்கான தொகைகள் செல்லவில்லை. முக்கியமாக அடுத்த மாதம் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், அப்போது காலை உணவுத் திட்டத்திற்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஆட்சி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இருத்தல் கூடாது. தவெக ஆட்சியை தொடர திமுக தடையாக இருக்காது. திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல், ராஜினாமா செய்துள்ளார் விஜய். ஒரு தொகுதியில் நிற்க தைரியம் இன்றி இரண்டு தொகுதியில் நின்றுள்ளார்.
எனவே நாங்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்கிறோம். நாங்கள் வெளிநடப்பு செய்வதால் உங்களுக்கு மொத்த எண்ணிக்கை குறைந்து வாக்கெடுப்பில் வெல்லத்தான் போகிறீர்கள். அதன் பிறகாவது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக செயல்படுங்கள். அதிமுக பிளவுபட்டுள்ளது.
அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதன் பிறகு நடந்ததுதான் ட்விஸ்ட். அந்த பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. பின்னாலேயே புதிய முதல்வரும் சென்றார். புஷ்பா பட பாணியில் ஆட்சி நடந்து வருகிறது.
சேஞ்ச் வரும் என்று நம்பித்தான் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் சேஞ்சுக்கு பின் பெரிய எக்ஸ்சேஞ்ச் இருக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு உதயநிதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.












Click it and Unblock the Notifications