“சனிக்கிழமை மட்டும்.. வீட்டை விட்டு வெளியே வரும் ஆள் நான் கிடையாது!” - உதயநிதி ஸ்டாலின்
சென்னை: "நான் பல மாவட்டங்களுக்கு சுற்று பயணம் போகிறேன். வாரத்துல நாலஞ்சு நாள் வெளியூர்லதான் இருப்பேன். சனிக்கிழமை மட்டும் வெளியே வர ஆள் நான் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை கூட வெளியே சுத்திட்டுதான் இருப்பேன்" என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாவட்ட வாரியாக பிரச்சார பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய பிரச்சார பயணம் சனிக்கிழமைகளில் மட்டுமே இருப்பதால், வீக் எண்ட் பாலிடிக்ஸ் செய்கிறார் என விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், விஜய்யை தாக்கியிருக்கிறது.

இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில், விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தேசிய, சர்வதேச மற்றும் ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 819 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடிக்கான உயரிய ஊக்கத் தொகையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
"1.20 கோடி மகளிருக்கு, மகளிர் உரிமைத் தொகையை முதலமைச்சர் கொடுத்து வருகிறார். நான் பல மாவட்டங்களுக்கு சுற்று பயணம் செல்கிறேன். வாரத்துல அப்படியே 4,5 நாட்கள் வெளியூர்லதான் இருப்பேன். சனிக்கிழமை மட்டும் விட்டை விட்டு வெளியே வர ஆள் நான் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை கூட வெளியே சுத்திட்டுதான் இருப்பேன்.
பல மாவட்டங்கள் போகும்போது, அங்க கூட்டமா மக்கள் நிப்பாங்க. மனுக்களோட நிப்பாங்க. தாய்மார்கள் நிப்பாங்க. வண்டிய நிப்பாட்ட சொல்லுவேன். நிறைய பேர் மணுக்கள் கொடுப்பாங்க. இளைஞரணி செயலாளராக இருக்கும்போது கொஞ்சம் கொடுத்தாங்க. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது மனுக்கள் அதிகமாச்சு. துணை முதலமைச்சர் ஆன பின்னர் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வண்டியில மனு வைக்கறதுக்கு இடம் இல்லை. இருந்தாலும் மக்களிடம் பேசி அவர்கள் குறைகளை கேட்டறிந்துக்கொள்வேன்.
சிலர் சிரிச்ச முகத்தோட வரவேற்பாங்க. அதுவும் 14, 15 மற்றும் 16 இந்த மூணு தேதியில போனீங்கன்னா தைரியமா போலாம். ஏன்னா அந்த மூணு நாள்லதான் பேங்க் அக்கவுண்ட்ல ரூ.1,000 வரவு வச்சிருவாங்க. மக்கள்கிட்ட பேச, குறைகளை கேட்க பொருத்தமாக இருக்கும். அதுக்குன்னு மற்ற நாட்களில் போக மாட்டேனா? என கேட்காதீங்க. எல்லா நாளும் அதுதான் எங்களுக்கு வேலை. பல பேர் பாராட்டுவாங்க, வாழ்த்துவாங்க, "தம்பி அப்பாட்ட சொல்லிடு, ரூ.1,000 வந்துருச்சு தேங்க்ஸ்" அப்படின்னு சொல்லுவாங்க.
இந்த உரிமை தொகை எப்படி பயன்படுதுன்னு கேட்பேன். உடம்பு சரியில்லனா, மாத்திரை வாங்கவும், பேர பிள்ளைகளின் கல்வி செலவுக்கும் பயன்படுதுன்னு சொல்லுவாங்க. சில இடங்களில் உரிமைத்தொகை வரலன்னு சொல்லுவாங்க. அவங்க கோரிக்கையை கவனமாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு போவோம். நாங்க இப்படி மக்களுக்காக வேலை செய்யுறோம். ஆனா, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை இன்னும் விடுவிக்கல. தமிழ்நாட்டு மக்கள் கிட்டத்தட்ட ரூ.55 லட்சம் கோடியை ஜிஎஸ்டி வரியா கட்டி இருக்கிறோம்.
அந்த பணத்தை திருப்பி கொடுத்தீங்களா? கல்வி நிதியை கொடுத்தீங்களா? என்ன கண்டிஷன் போட்டீங்க? புதிய கல்வி கொள்கையை ஏத்துக்கிட்டாதான் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூ.2,200 கோடியை கொடுப்பேன்னு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னார். ஆனா அந்த புதிய கல்வி கொள்கையில என்ன இருக்கு? சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டுக்குள்ள நுழைக்கறதுக்காக கொண்டு வரப்படுறதுதான் புதிய கல்வி கொள்கை. குலக்கல்வி திட்டத்தை உள்ள கொண்டு வர்துக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் புதிய கல்வி கொள்கை" என்று பேசியிருந்தார்.











Click it and Unblock the Notifications