ஒரே நேரத்துல எல்லா தோல்வியையும் கடந்துடலாம்ல.. ‘ஒரே தேர்தல்’: ஆதரித்த அதிமுகவை கலாய்த்த உதயநிதி!
சென்னை: வரிசையாக தோல்விகளைச் சந்தித்து வருவதால் தொடர்ந்து மனக் கஷ்டமாக இருக்கும். எனவே ஒரே நேரத்தில் தோல்வியை சந்திக்கலாம் என்பதற்காக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அதிமுக ஆதரிக்கிறது என விமர்சித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மத்திய பாஜக அரசின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நடைமுறைக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் இருந்தபோது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி இப்போது ஆதரவு தெரிவித்துள்ளார்.

தான் முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி, இப்போது ஆட்சியில் இல்லாததால், அதே திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பதவிக்காக சந்தர்ப்பவாத முடிவெடுக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" முறைக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, "அதிமுக ஆட்சியில் இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்தார்கள். இப்போது ஆதரவு தெரிவிக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது அதிமுக.
இப்படி அடிக்கடி தோல்விகள் சந்தித்தால் தொடர்ந்து கஷ்டமாக இருக்கும், ஒரே நேரத்தில் எல்லா தோல்விகளையும் எதிர்கொண்டால் அத்துடன் முடிந்துவிடுமல்லவா? மனது சாந்தமடையும், அதனால் தான் இதை வரவேற்றுள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே இந்த திட்டத்தை எதிர்த்தது. இப்போதும் எதிர்க்கிறோம். நாங்கள் இருக்கும் வரை ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதையெல்லாம் அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அண்ணா பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு மாநில சுயாட்சிக்கு எதிராக அதிமுக செயல்படுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அது அண்ணாவின் பெயர் என்று யார் சொன்னது? அதிமுகவில் உள்ள அ என்ற எழுத்து அமித் ஷாவின் பெயர்" எனச் சீண்டினார்.
முன்னதாக, காலை உணவுத் திட்டத்தை சீமான் விமர்சித்தது பற்றிப் பேசிய உதயநிதி, "காலை உணவுத் திட்டம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்பை விட மாணவர்கள் கூடுதலாக வருகிறார்கள். நான் பல மாவட்டங்களில் ஆய்வு செய்து உணவை சாப்பிட்டு, எத்தனை மாணவர்கள் சாப்பிடுகிறார்கள் என்பதையெல்லாம் ஆய்வு செய்துள்ளேன். 17 லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறுகிறார்கள்.
ஆனால், காலை உணவுத் திட்டம் தொடர்பாக வன்மத்துடன் செய்தி வெளியிட்ட நாளிதழுக்கு தமிழக மக்கள் மத்தியில் எப்படி எதிர்ப்பு எழுந்தது என அனைவருக்கும் தெரியும். ஆகவே, யாராக இருந்தாலும் மாணவர்களுடன் சென்று அமர்ந்து உணவை சாப்பிட்டு விட்டு அதன்பிறகு கருத்து கூறுங்கள்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications