அனிதா ஞாபகம் இருக்கா.. ஜெ. எப்படி இறந்தார்னு தெரியுமா.. இவங்களுக்கு தண்டனை வேணாமா.. உதயநிதி கேள்வி
மத்திய சென்னையில் தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னை: "அனிதாவை ஞாபகம் இருக்கா? அனிதாவை கொன்றவர்கள்தான் மோடி, இபிஎஸ், ஓபிஎஸ்.. இவங்களுக்கு தண்டனை வேண்டுமா? வேண்டாமா? ஜெயலலிதா எப்படி இறந்தார்ன்னு யாருக்காவது தெரியுமா?" என்று பகிரங்க கேள்விகளை எழுப்பி உள்ளார் உதயநிதி ஸ்டாலின்!
இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கலைஞர் பேரன், நடிகர் என்பதற்காக இவருக்கென இளசுகள் கூட்டம் கூடி வருகிறது. இருந்தாலும் வயசில் பெரியவர்களை மரியாதையின்றி விமர்சித்து வருவதாகவும் இவர் மீது வருத்தம் அனைவருக்கும் உள்ளது!
இந்நிலையில், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழக அரசு முதல் மத்திய அரசு வரை பாரபட்சமே இன்றி கேள்வி எழுப்பி வாக்கு சேகரித்தார். உதயநிதி பேசியதாவது:

அனிதா ஞாபகம் இருக்கா?
"அனிதாவை ஞாபகம் இருக்கா? அனிதாவை கொன்றவர்கள்தான் மோடி, இபிஎஸ், ஓபிஎஸ். இவங்களுக்கு தண்டனை வேண்டுமா? வேண்டாமா? இந்தத் தேர்தலின் கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கைதான். இந்தியாவின் வில்லன் மோடி. இந்த வில்லனின் கைக்கூலிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.

என்ன சாதனை?
அவர்களை கடுமையாக டயர் நக்கி என விமர்சனம் செய்தவர் அன்புமணி ராமதாஸ் ஆனால் அவர் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார். முதல்வரிடம் 2 ஆண்டு காலம் நீங்கள் என்ன சாதனை செய்தீர்கள் என்று கேட்டால், நான் 2 ஆண்டு முதல்வராக இருப்பதே சாதனைதான் என்கிறார்.

எப்படி இறந்தாங்க?
'அம்மா' வழியில் ஆட்சி செய்கிறோம் என்கிறார்களே, நான் அவங்கள பார்த்து ஒரேயொரு கேள்வி கேட்கிறேன். அவர் எப்படி இறந்தார் என்று யாருக்காவது தெரியுமா? அது இன்னும் மர்மமாகவே இருக்கு. முதல்வரையே அப்போலோவுக்கு அனுப்பிட்டாங்க.. யாரையும் பார்க்கவிடாமல் செய்துவிட்டனர். ஒரு போட்டோ வெளியே வந்ததா?

இட்லி சாப்பிட்டாங்க
'அம்மா' சாவில் மர்மம் இருக்கிறது என்று சமாதியில் போய் சொன்னார் ஓபிஎஸ். துணை முதல்வர் பதவி கிடைத்தவுடன் வாயை மூடிக்கொண்டார். 'அம்மா' எப்படி இறந்தாங்கன்னு தெரியலையே என்கிறார். 90 நாட்கள் ஆஸ்பத்திரியில் அடைத்து வைத்து, 'அம்மா' இட்லி சாப்பிட்டார், 'அம்மா' தொட்டுக்க சட்னி சாப்பிட்டார் என்று தினமும் சொன்னார்கள்.

1 இட்லி ரூ.75 லட்சம்
ஆனால் ஜெயலலிதா சாப்பிட்ட 2 இட்லிக்கு 1.5 கோடி பில் போட்டாங்க. அதாவது ஒரு இட்லி 75 லட்ச ரூபாய். இட்லி சாப்பிட்டவங்க ஒருநாள் திடீர்னு இறந்துட்டார்னு சொன்னாங்க. ஒரு முதல்வருக்கே பாதுகாப்பு கொடுக்காத இந்த அரசு, எப்படி பொதுமக்களை பாதுகாக்கும்?

தயாநிதி மாறன்
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் அமைச்சரவையில் இருந்தபோது, மேதா நகர் பாலம் வில்லிவாக்கம் சப்வே சாம்சங், நோக்கியா போன்ற தொழிற்சாலைகள் வரக் காரணமானவர். பில்கேட்சையே இங்க கூட்டி வந்து முதலீடு கொண்டு வந்தவர். அதனால் மறக்காம உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க"என்றார்.












Click it and Unblock the Notifications