காயிதே மில்லத் நினைவிடத்தில் தயங்கி தயங்கி நின்ற உதயநிதி! கையை பிடித்து முன்னுக்கு இழுத்த தயாநிதி!
சென்னை: மறைந்த முஸ்லீம் லீக் தலைவர் காயிதே மில்லத் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தயங்கி தயங்கி பின்னால் நின்றதை கவனித்த தயாநிதி மாறன் எம்.பி., அவரது கையை பிடித்து இழுத்து முன் வரிசையில் முதல்வரோடு நிற்குமாறு அழைத்தார்.
கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 128வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து சென்னை வாலாஜா சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், வெள்ளக்கோவில் சாமிநாதன், செஞ்சி மஸ்தான், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர். அப்போது முதமைச்சர் ஸ்டாலின் பக்கத்தில் துரைமுருகனும் ஹஜ்ரத் என்றழைக்கப்படும் இஸ்லாமிய மத குருமார்களும் நின்றனர்.
இதனால் பின்னாலேயே நிற்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின் வரிசையில் நின்று கொண்டிருந்தார். இதை கவனித்த தயாநிதி மாறன் எம்.பி. உதயநிதியை நினைவிடம் அருகே வந்து நிற்குமாறும், முன் வரிசைக்கு வருமாறும் அழைத்தார். இருப்பினும் கூட்டம் அதிகமாக இருந்ததால் உதயநிதி தயங்கியதை அடுத்து, அவரது கையை பிடித்து இழுத்து முன் வரிசையில் நிறுத்தினார் தயாநிதி.

இது ஒரு நிகழ்வு என்றால் அங்கு நடந்த மற்றொரு நிகழ்வு தமாஷானது. அதாவது சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தான் நியாயமாக இந்த விழாவில் முதல்வர் பக்கத்தில் நின்றிருக்க வேண்டும். ஆனால் அவரை கூட்ட நெரிசலில் சிலர் பின்னே தள்ளியதும் அவரும் விடுவேனாயென்று முண்டியடித்து தள்ளிக்கொண்டு முதல்வர் பக்கத்தில் வந்து நின்றதும் குறிப்பிடத்தக்கது.
காயிதே மில்லத் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்திய பிறகு சில விநாடிகள் அங்கு து ஆ ஓதப்பட்டது. அதிலும் முதல்வர் உட்பட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே காயிதே மில்லத் குறித்து தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவு விடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், மதநல்லிணக்கம், மொழிப்பற்று, மாநில உரிமை ஆகியவற்றுக்காக தன் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த பெரியவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications