நெஞ்சு வலியில் கதறிய செந்தில் பாலாஜி! மருத்துவமனை விரைந்த அமைச்சர் உதயநிதி, மா சுப்ரமணியன், ஏவ வேலு
சென்னை: நெஞ்சு வலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா சுப்ரமணியன், ஏவ வேலு ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பல நாட்களாக நடைபெற்ற ஐடி சோதனை நிறைவடைந்த நிலையில் நேற்று காலை செந்தில் பாலாஜி வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடங்கியது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். நேற்று மதியம் 1.30 மணி முதல் தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்தது. இரவு கரூரில் 6 இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.
செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டிலும் 15 மணி நேர சோதனை முடிவடைந்து இருக்கிறது. சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அமைந்து உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரம் கழித்து நள்ளிரவு 1 மணியளவில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை கைது செய்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தெரிவித்து உள்ளனர்.
அதை தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது திடீரென தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி காரில் படுத்து அழுது இருக்கிறார். இதனை அடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சுவாசக் கோளாறு மற்றும் அல்சர் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அமைச்சருக்கு நெஞ்சு வலியும் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏவ வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் காத்திருந்த உதயநிதி ஸ்டாலின் காரில் புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார். திமுக மிசாவையே பார்த்தது. பாஜகவின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது." என்று கூறிவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications