திமுக அடைந்த தோல்வி.. கனிமொழியை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்.. பின்னணியில் ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்!
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து வரும் சூழலில், நேற்றிரவு கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையில் சந்திப்பு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பின் போது தேர்தல் தோல்வி குறித்தும், தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யவும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து தவெக ஆட்சி அமைத்திருக்கும் சூழலில், திமுகவில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் தொடங்கி இருக்கிறது. இந்த முறை திமுகவில் அடிப்படை கட்டமைப்பில் இருந்து மாவட்டச் செயலாளர்கள் வரை மாற்றங்கள் இருக்கும் என்று விவரம் அறிந்தவர்கள் பலரும் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

குறிப்பாக திமுக படுதோல்வி அடைந்த மாவட்டங்களில் ஏராளமான நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஸ்டாலின் விரிவாக விசாரணையை நடத்த இருக்கிறார்.
இதனிடையே நேற்று இரவு உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி இடையிலான சந்திப்பு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. திமுக எம்பி கனிமொழி வீட்டில் நடந்த ஆலோசனையில் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனையின் போது திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கனிமொழி அடுக்கியதாக தெரிகிறது.
அப்போது சபரீசனும் உடனிருந்திருக்கிறார். அப்போது தேர்தலின் போது ஒவ்வொரு தொகுதியிலும் சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் திமுக ஆட்சியில் இருந்த போது, மூவரும் தனித் தனியாக தங்களின் டீமுடன் பணியாற்றி வந்தனர்.
தற்போது ஆட்சியை பறிகொடுத்துள்ள சூழலில் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகிய மூவரும் இணைந்து பணியாற்ற ஸ்டாலின் அறிவுறுத்தியதாக அக்கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. இந்த மூவரின் ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் எதிரொலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications