முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு.. டிடிவி தினகரன்
சென்னை: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் சொந்த தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகமெங்கும் அறிவிக்கப்படாமல் அரங்கேறும் திடீர் மின்வெட்டால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் வீதிகளில் வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் . பொதுமக்கள் படும் துயரங்களை அலட்சியமாக எதிர்கொள்ளாமல் மின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் சொந்த தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகமெங்கும் அறிவிக்கப்படாமல் அரங்கேறும் திடீர் மின்வெட்டால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் வீதிகளில் வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே முடியாத அளவிற்குக் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், இத்தகைய அறிவிக்கப்படாத மின்வெட்டு அவர்களை வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டாலும் குறைவான மின் அழுத்தப் பிரச்சினையாலும், குழந்தைகளும் முதியவர்களும் அசௌகரியத்திற்கு உள்ளாவதோடு, வீட்டில் உள்ள மின்சாதப் பொருட்களும் பழுதாகி வருவதும் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர்கள் என்றைக்குச் சொன்னார்களோ, அன்று முதலே தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டுகள் தொடர்வது, தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, பொதுமக்கள் படும் துயரங்களை அலட்சியமாக எதிர்கொள்ளாமல் மின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.
இதனிடையே டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தைச் சார்ந்த தவெக நிர்வாகிகள் இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஸ்ரீ வைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு சரவணன் அவர்களின் ஆதரவாளர்கள் தன்னை தொடர்பு கொண்டு காவல்துறையில் அளித்த புகாரைத் திரும்பப்பெறவேண்டும் என மிரட்டியதாகவும், தன்னைப் போலவே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட மற்றொரு பெண்ணும் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் அளித்திருக்கும் பேட்டியைக் கேட்கும் போதே பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.
மருத்துவமனைகளில் ஆய்வு, அம்மா உணவகத்தில் சோதனை எனும் பெயரில் தவெக நிர்வாகிகள் அரங்கேற்றிய அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த தவறியதன் விளைவே, இன்று ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதோடு, புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டும் அளவிற்கான துணிச்சலை தவெகவினருக்கு கொடுத்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சருக்கு இணையாக தவெகவின் மாவட்டச் செயலாளருக்கு இருக்கை அமைத்து அமரவைப்பதும், குன்னூரில் நகராட்சி ஆணையரை தவெக நிர்வாகி ஒருவர் பகிரங்கமாக மிரட்டுவதும் தான் தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின்பு ஏற்பட்ட ஒரே மாற்றமாக இருக்கிறது.
தமிழகத்தில் கொத்து கொத்தாக அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் கண்டு, துளியளவும் குற்ற உணர்ச்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் தன்மீது வேண்டுமென்றே பழியைத் தூக்கிப் போடுவதாகக் கொக்கரித்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், இவ்விவகாரத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் தன் தோழமைக் கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு பெ.சண்முகம் அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
நீண்ட இழுபறிக்குப் பின் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களால், இன்று தொடங்கி வைக்கப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழகப் பெண்களை, முதலில் தவெகவினரிடம் இருந்து தான் பாதுகாக்க வேண்டும் என்று எழுந்திருக்கும் விமர்சனம் தவெக அரசின் ஒரு மாத கால ஆட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எனவே, இனியும் தமிழகத்தில் சீரழிந்திருக்கும் சட்டம் ஒழுங்கிற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என போலிக் குற்றச்சாட்டை முன்வைத்து மக்களை ஏமாற்றாமல், தமிழகத்தில் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் குறைத்து மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications