உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. 12 லட்சம் பேர் உரிமைத் தொகை விண்ணப்பம்.. எத்தனை பேருக்கு வரும்?
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கி ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ளது, விண்ணப்பித்த 12 லட்சம் பெண்களில் எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது? என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்குவதற்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. கடந்த 31 நாள்களில் 2500-க்கும் கூடுதலான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த முகாம்களின் மூலம் பயனடைந்த மக்களின் விவரங்கள் குறித்து எந்த விவரங்களையும் தமிழக அரசு வெளியிடவில்லை.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் நடந்த முகாம்களில் மொத்தம் 25 லட்சம் பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேநேரத்தில் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த 12 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களில் ஒருவருக்குக் கூட இன்று வரை மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் அங்கேயே சரிபார்க்கப்பட்டு, உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளனவா? என்பதையும் உறுதி செய்து தான் பெறப்படுகின்றன.
மகளிர் உரிமை தொகை
அத்தகைய சூழலில் மகளிர் உரிமைத் தொகை கோரும் விண்ணப்பங்கள் மீது அதிகபட்சமாக 2 நாள்களில் முடிவெடுக்க முடியும். ஆனால், ஒரு மாதங்களில் பெறப்பட்ட 12 லட்சம் விண்ணப்பங்களில் ஒன்று கூட இன்னும் பரிசீலிக்கப்படவில்லை; விண்ணப்பித்தவர்களில் ஒருவருக்குக் கூட மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்பதிலிருந்தே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எத்தகைய ஏமாற்று வேலை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அது ஓர் ஏமாற்றுத் திட்டம் என்று கூறி வருகிறேன். அது இப்போது உண்மையாகி வருகிறது. இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?, என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் கடந்த ஒரு மாதமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களும் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் விண்ணப்பம் செய்தவர்களின் விண்ணப்பங்கள் பகுதி பகுதியாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். உங்கள் விண்ணப்பத்தின் விலையை நீங்கள் ஆன்லைனிலேயே அறிந்து கொள்ள முடியும்.
உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமை தொகை
இந்த உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் யார் யார் பயன்பெற முடியும், யார் யாருக்கு வாய்ப்பு இல்லை என்ற தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசு வெளியிட்ட தகவல்படி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முகாம்களில் சுமார் 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், மகளிர் உரிமைத் திட்ட நிதியுதவி கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications